பெர்சத்துவில் இருந்து நீக்கம்: நீதிமன்றத்தில் தடை உத்தரவு கோருகிறார் டாக்டர் மகாதீர்

பெர்சத்து கட்சியில் தங்களது உறுப்பியத்தை தக்கவைக்க, டாக்டர் மகாதிர் முகமட் மற்றும் சிலர் நீதிமன்றத்தில் தற்காலிக தடை உத்தரவை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த விவகாரத்தை வழக்கறிஞர் முகமட் ஹனிஃப் காத்ரி அப்துல்லா உறுதிப்படுத்தினார். ஜூன் 18 ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் விண்ணப்பம் விசாரிக்கப்படும் என்று அவர் விளக்கினார்.

கட்சியில் இருந்து தவறாக பதவி நீக்கம் செய்ததாகக் கூறி மகாதீர் மற்றும் சிலர் சமீபத்தில் முகிதீன் மற்றும் மூன்று பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மகாதீருடன், முக்ரிஸ் மகாதிர், சையத் சதிக் சையத் அப்துல் ரஹ்மான், மஸ்லீ மாலிக், அமிருதீன் ஹம்சா மற்றும் மர்சுகி யஹ்யா ஆகியோரும் அடங்குவர்.

“விசாரணை முடியும் வரை, அனைத்து தரப்பினரின் நிலையை முன்பிருந்த நிலைக்கு நிறுத்துவதற்கு (status quo) ஓர் உத்தரவை கோரியுள்ளோம்” என்று ஹனிஃப் கூறினார்.

விண்ணப்பத்தை விசாரிக்க நீதிமன்றம் ஜூன் 18 ஐ நிர்ணயித்துள்ளது, என்றும் அவர் தெரிவித்தார்.