நான் ஏன் முகிதீனுடன் ஒத்துழைக்க விரும்பவில்லை? – மகாதீர்

பிரதமர் முகிதீன் யாசினுக்கு ஆதரவளித்து ஒத்துழைக்க பலர் எனக்கு அறிவுறுத்தினர்.

நான் ஏன் முகிதீனுடன் ஒத்துழைக்க விரும்பவில்லை என்பதை விளக்குகிறேன்.

நானும் அவரும் பல நண்பர்களுடன் இணைந்து நஜிப் ரசாக்கின் கிளெப்டோக்ராடிக் அரசாங்கத்தை அகற்றுவதற்காக மலேசியாவின் பெர்சத்து கட்சியை உருவாக்கினோம்.

இது எங்கள் போராட்டம் என்று மக்கள் நம்பினார்கள். மக்கள் எங்களுக்கு வெற்றியைத் தந்தார்கள்.

ஆனால் முகிதீன், பெர்சத்துவில் சேர்ந்த அம்னோ உறுப்பினர்களுடன் இணைந்து, பக்காத்தான் ஹராப்பானை (பி.எச்) தூக்கியெறிந்து, நாங்கள் தோற்கடித்த எதிர்க்கட்சியுடன் ஒரு புதிய அரசாங்கத்தையும் அமைக்க திட்டமிட்டார்.

என்னைப் பொறுத்தவரை இது மக்களுக்கு துரோகம் இழைக்கும் ஒரு செயலாகும். எங்களை வெற்றி பெற செய்த பாக்காத்தான் நண்பர்களுக்கும் இது துரோகம் இழைப்பதாக உள்ளது. பாக்காத்தான் இல்லாவிட்டால், முகிதீன் வென்றிருக்க மாட்டார், பின் கதவைக் கண்டுபிடித்திருக்கவும் முடியாது.

ஆம், பாக்காத்தானில் டிஏபி உள்ளது என்பது உண்மைதான். டிஏபி 42 இடங்களை வென்ற போதிலும், அமைச்சரவையில் டிஏபி ஆறு அமைச்சர்களை மட்டுமே கொண்டுள்ளது. பெர்சத்து 13 இடங்களை மட்டுமே வென்றது, ஆனால் அதுவும் ஆறு அமைச்சர்களை கொண்டுள்ளது. மேலும் பெர்சத்து கட்சியிலிருந்து உறுப்பினர்கள் பிரதமராகவும் அமைச்சரவையில் 28 அமைச்சர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ஆறு அமைச்சர்களுடன் அமைச்சரவையை ஆட்சி செய்வது டிஏபிக்கு சாத்தியமில்லை. அமைச்சரவையில் உள்ள அனைத்து முடிவுகளுக்கும் 28 அமைச்சர்களின் ஒப்புதல் தேவை.

டிஏபியின் ஆறு அமைச்சர்கள் மற்ற 22 அமைச்சர்களை ஆளுமை செய்ய முடியும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. மேலும், பிரதமராக எனது ஒப்புதலும் அவசியம்.

டிஏபி மலாய்க்காரர்களை அழிக்க முடியாது. ஆனால் மலாய்க்காரர்கள் டிஏபியை அழிக்க முடியும். மலாய் உள்துறை அமைச்சர் டிஏபியின் பதிவை ரத்து செய்தால் டிஏபி அழிந்துவிடும்.

டிஏபி மலாய்க்காரர்களை அழிப்பதாகத் தோன்றினால், முகிதீன் அதன் பதிவை தாராளமாக ரத்து செய்யலாம். ஆனால், மலாய்க்காரர்களை பயமுறுத்துவதற்கு மட்டுமே டிஏபியை பயன்படுத்துவதில் முகிதீன் ஆர்வம் காட்டுகிறார். இதனால் மலாய்க்காரர்களும் பாக்காத்தானை வீழ்த்துவதற்கான அணியில் சேருகிறார்கள். முகிதீன் அம்னோ மற்றும் பாஸ் ஆதரவுடன் பிரதமரானார்.

நஜீப்பை சிறையிலிருந்து விடுவிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் வகையில் அம்னோ முகிதீனை பிரதமராக ஆதரித்துள்ளது. இந்த முயற்சிகள் இப்போது நடப்பதை நம்மால் காண முடிகிறது.

நஜிப்பை அகற்றும் தனது வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு பதிலாக, முகிதீன் இப்போது நஜிப்பை அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்து, அவரை 15வது பொதுத் தேர்தலில் போட்டியிடச் செய்ய முயற்சிக்கிறார். அந்த நேரத்தில் நஜிப்பிற்கு முகிதீன் தேவைப்படமாட்டார். ஏனெனில் நஜிப் பிரதமராக விரும்புகிறார்.

15வது பொதுத் தேர்தலில், பாக்காத்தானின் ஆதரவு இல்லாமல் ஆட்சியில் இருக்கும் பெர்சத்துவிற்கு எதிராக அம்னோ போட்டியிடும். முகிதீன் தோல்வி அடைவது மட்டுமல்லாமல், அனைத்து பெர்சத்து வேட்பாளர்களும் தோற்பார்கள். இவ்வாறு பெர்சத்துவின் கதை முடியும். மீண்டும் அம்னோவின் ‘பண அரசியல்’ ராஜ்ஜியம் தொடரும்.

மக்கள் பாக்காத்தானுக்கு அளித்த ஆணைக்கு எதிராக செயல்பட்ட முகிதீனின் துரோகத்தை வரலாறு பதிவு செய்யும்.

முகிதீனுடனும் அவரது துரோகத்துடனும் நான் இருக்க விரும்பவில்லை.

முன்னாள் பிரதமரும் லங்காவியின் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் மகாதீர் முகமட்டின் இந்த இடுகை முதலில் அவரது வலைப்பதிவில் வெளியிடப்பட்டது. இது அவரின் தனிப்பட்ட கருத்தாகும்.