சபாவில் புதிய அரசாங்கம் அமைக்க பெரும்பான்மை உள்ளது, மூசா அமான் அறிவித்தார்

சபாவின் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு போதுமான பெரும்பான்மை இருப்பதாக மூத்த அரசியல்வாதி மூசா அமான் அறிவித்தார்.

அவர் தலைமையிலான ஒரு புதிய கூட்டணி அமைக்கப்பட்டதாகவும், அவருக்கு கிடைத்த ஆதரவை உறுதிப்படுத்தும் உறுதிமொழி அறிக்கைகளை (எஸ்டி) சபா மாநிலத் தலைவருக்கு சமர்ப்பிப்பதாகவும் அவர் கூறினார்.

பிரதமர் முகிதீன் யாசின் தலைமையிலான தேசிய கூட்டணியை ஆதரிக்கும் அந்த புதிய கூட்டணி ஒரு புதிய அரசாங்கத்தை அமைக்க பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெற்றுள்ளது என்பதை தெரிவிக்க, உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் ஹம்சா ஜைனுடின் மற்றும் பிரதமரின் அரசியல் செயலாளர் நார்டின் ஆகியோர் வருகை அளித்தனர் என்பதை நான் தெரிவிக்க விரும்புகிறேன்.” என்று அவர் கூறினார்.

அந்த புதிய கூட்டணி பெரும்பான்மையை நிரூபிக்க முடிந்தால், ஷாஃபி அப்தால் தலைமையிலான வாரிசான் கட்சியில் இருந்து அது ஆட்சியைக் கைப்பற்றும்.

சபாவில் 65 மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

பாரிசான் ஆட்சியின் போது மாநில முதலமைச்சராக இருந்த மூசா, புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு மாநில சட்டசபையில் குறைந்தது 33 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைக் கொண்டிருக்க வேண்டும்.

இதற்கிடையில், வாரிசான் அரசாங்கத்தை பாதுகாக்க ஷாஃபிக்கு இன்னும் போதுமான ஆதரவு இருப்பதாக மாநில முதலமைச்சர் அலுவலகத்தின் ஒரு வட்டாரம் மலேசியாகினியிடம் கூறினார்.

உறுதிமொழி அறிக்கையில் (எஸ்டி) அவரும் தனக்கான ஆதரவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“மூசாவுக்கு போதுமான ஆதரவு இல்லை. ஷாஃபி விரைவில் ஒரு அறிவிப்பை வெளியிடுவார்,” என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி, உப்கோ, டிஏபி மற்றும் பி.கே.ஆர் ஆதரவுடன் வாரிசன், 43 இடங்களைக் கொண்டுள்ளது.

“நாங்கள் யாங் டிபெர்துவா நெகேரியை சந்திப்போம். எனக்கு வழங்கப்பட்ட அறிவிப்பு கடிதத்தை நான் ஒப்படைப்பேன். எளிய பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைத்தால் போதும்.” என்று மூசா கூறினார்.

எவ்வாறாயினும், மூசா அவர் குறிப்பிட்ட புதிய கூட்டணியின் பெயரைக் குறிப்பிடவில்லை. மாறாக, இது தேசிய கூட்டணியை (பி.என்) ஆதரிக்கும் பல்வேறு கட்சிகளின் கூட்டணி என்றார்.