செப்டம்பர் 26, சபா மாநில தேர்தல்!

சபாவில் புதிய அரசாங்கத்தை அமைக்க, செப்டம்பர் 26 அன்று சபா மக்கள் தங்கள் சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பார்கள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதை தேர்தல் ஆணையத்தின் துணைத் தலைவர் டாக்டர் அஸ்மி ஷரோம் கோத்தா கினாபாலுவில் அறிவித்தார்.

வேட்பு மனுத் தாக்கல் செப்டம்பர் 12 அன்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அஸ்மி அறிவித்த தேதியின் அடிப்படையில், போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் பிரச்சாரம் செய்வதற்கான காலம் 14 நாட்கள் ஆகும்.

இந்த தேர்தலுக்கு, ஜூலை 29 வரை புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பதிவேட்டை தேர்தல் ஆணையம் பயன்படுத்தும்.

தேர்தல் ஆணையம் முன்பு செய்ததைப் போலவே, வாக்கு எண்ணும் செயல்முறையை நேரடியாக ஒளிபரப்பும் என்றும் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அஸ்மி கூறினார்.

1.12 மில்லியன் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருப்பதாக அஸ்மி கூறினார். அவர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்த முறை வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

12,297 ஊனமுற்ற வாக்காளர்கள் (ஓ.கே.யூ) அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சமூக நலத்துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அஸ்மி தெரிவித்தார்.

இந்த முறை தேர்தலுக்குத் தேவையான செலவு பற்றி கூறுகையில், சுமார் RM186 மில்லியன் என்று தேர்தல் ஆணையம் மதிப்பிடுகிறது என்றார் அஸ்மி.