தாய்மொழிப்பள்ளிகள் இனப் பிளவுகளுக்கு காரணமல்ல – வி சிவகுமார்

நாட்டின் பல்வேறு இனங்களிடையே ஒற்றுமையின் மொழி மலாய் மொழி என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.

ஆனால், இது மற்ற மொழிகளை, குறிப்பாக தாய்மொழிகளை அகற்ற வேண்டும் என்று அர்த்தமில்லை.

தாய்மொழிப்பள்ளிகள் அவற்றின் சொந்த வரலாற்றைக் கொண்டுள்ளன. மேலும் நம் நாட்டின் அடையாளம், தனித்துவம் மற்றும் இன வேறுபாட்டை முன்னிலைப்படுத்த அவை பராமரிக்கப்பட வேண்டும். நாம் பெற்றிருக்கும் இந்த பன்முகத்தன்மை ஈடு இணையற்ற ஒரு தேசிய புதையல் ஆகும்.

எனவே, நம் நாட்டில் தாய்மொழிப்பள்ளிகள் இருப்பதை அரசியல் தலைவர்கள் கேள்விக்குள்ளாக்குவது பொருத்தமானதல்ல.

தாய்மொழிப்பள்ளிகளை கட்டங்கட்டமாக அகற்ற விரும்பும் பெர்சத்து இளைஞர் தலைவரான செனட்டர் வான் அஹ்மத் ஃபாய்சால் வான் அஹ்மத் கமலின் அறிக்கை குறித்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன்.

இந்த பள்ளிகள் தேசிய ஒருமைப்பாட்டை பிரதிபலிக்கவில்லை என்றும் இன ஒருங்கிணைப்பை முறியடிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இனவெறி கருத்தை ஆதரிக்கும் ஒரு இன அரசியல் கட்சியின் உறுப்பினராக இருக்கும் அவரின் அறிக்கை குறித்து விசித்திரமாக உணர்கிறேன்.

என் கருத்துப்படி, இது போன்ற தலைவர்கள்தான் நம் நாட்டில் இனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை அழிக்கிறார்கள்.

தனது சொந்த கட்சி, பெர்சத்து மற்றும் தேசிய கூட்டணியின் பிற கூறுகளான அம்னோ, எம்.சி.ஏ மற்றும் எம்.ஐ.சி ஆகியவை அந்தந்த இன அடிப்படை கொள்கைகளை மறந்துவிட்டு, நம் நாட்டில் உள்ள பல இன மக்களிடையே ஒற்றுமையை உருவாக்கக்கூடிய தேசிய கொள்கைகளை அமைக்குமாறு அவர் அறிவுறுத்த முடியுமா?

எந்தவொரு கட்சியின் அரசியல் நலன்களுக்காக தாய்மொழிப்பள்ளிகளை பயன்படுத்த வேண்டாம். அரசியல் தலைவர்கள் அந்தந்த இனங்களின் ஆதரவைப் பெறுவதற்காக தொடர்ந்து பிரச்சினைகளை தூண்டுவதால் தான் நம் நாட்டில் இனவெறி பிரச்சினைகள் உருவாகின்றன.

இது நம் நாட்டின் அரசியல் இயக்கவியலில் மறுக்க முடியாத உண்மை ஆகும். தாய்மொழிப்பள்ளிகளையே தொடர்ந்து விமர்சிப்பது என்பது மக்களைப் பிளவுபடுத்தும் ஒரு முயற்சி அல்லது செயல் ஆகும்.

இது நம் நாட்டில் அமைதியை அழிக்கும் தூண்டுதல் என்றும் விவரிக்கலாம்.

“தாய்மொழிப்பள்ளிகளை ஒழிப்பது முக்கிய தேசிய குறிக்கோளாக இருக்க வேண்டும்” என்று தேசிய கூட்டணி அரசாங்கத்தின் இளைஞர் மற்றும் விளையாட்டு துறையின் துணை அமைச்சராக இருக்கும் வான் அஹ்மத் பாய்சால் கூறியுள்ளார்.

ஒரு வலுவான தேசிய அடையாளத்தை பிரதிபலிக்கும் மாணவர்களை உருவாக்க தாய்மொழிப்பள்ளிகள் தவறிவிட்டது என்று அவர் கூறினார்.

அவரது கூற்று ஆதாரமற்ற ஒன்று என்று நான் அவருக்கு சவால் விடுகிறேன்.

ஒட்டுமொத்தமாகவே, தாய்மொழிப்பள்ளிகள் ஓர் அழகான பெருமை வாய்ந்த தேசபக்தி மனப்பான்மை கொண்ட மாணவர்களை உருவாக்குகின்றன.

இந்த மாணவர்களில் பலர் தேசிய பள்ளி மாணவர்களுடன் ஒப்பிடக்கூடிய அளவிற்கு மலாய் மொழியில் சரளமாக உள்ளனர்.

தேசிய பள்ளிகளில் அனைத்து மாணவர்களும் ஒரே கூரையின் கீழ் அமர்ந்திருப்பதால் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதாக அர்த்தமல்ல.

உண்மையான இன ஒருங்கிணைப்பு சாத்தியமாகியுள்ளதா? உங்களையே நீங்கள் கேட்டுகொள்ளுங்கள். தேசிய பள்ளிகளில் குழந்தைகள் அந்தந்த இனங்களின்படி கூடி உரையாடுவதையே நாம் இன்னும் காண்கிறோம்.

தாய்மொழிப்பள்ளிகள் எப்போதும் இனப் பிளவுக்கு ஒரு காரணியாக பயன்படுத்தப்படுகின்றன. இது தீங்கிழைக்கும் அரசியல் நோக்கம். நியாயமான மற்றும் அக்கறையுள்ள அரசாங்கக் கொள்கைகளின் மூலம் நம் நாட்டில் இன ஒருங்கிணைப்பை உருவாக்க இன்னும் பல வழிகள் உள்ளன.

தேசிய ஒற்றுமையை அடைய இன்னும் பல வழிமுறைகள் செயல்படுத்தப்படலாம் என்று வலியுறுத்திய தேசிய ஒற்றுமை அமைச்சர் ஹலிமா முகமது சாதிகியின் கருத்தில் நான் உடன்படுகிறேன்.

தாய்மொழிப்பள்ளிகளை அரசாங்கம் ஒழிக்காது என்று அவர் உறுதியளித்துள்ளார். நம் நாட்டில் உள்ள தாய்மொழிப்பள்ளிகளைப் பாதுகாப்பதில் மக்கள் நலன் சார்ந்த நிலைப்பாட்டை எடுத்துள்ள அவரை நான் பாராட்டுகிறேன்.

வி சிவகுமார் பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் டிஏபி துணை பொதுச்செயலாளர் ஆவார்.