வடக் கிள்ளானில் பி.கே.பி.பி. : இரண்டு சாலைத் தடுப்புகள், 3 சாலைகள் மூடப்பட்டுள்ளன

கிள்ளான் வட்டாரத்தில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (பிகேபிபி) காரணமாக, இன்று தொடங்கி அக்டோபர் 23 வரையில், புக்கிட் குடா பகுதியில் உள்ள 2 சாலைகளில் தடுப்புக்காவல் போடப்பட்டுள்ளதோடு, 3 சாலைகள் மூடப்படுவதாக வட கிள்ளான் காவல்துறை அறிவித்துள்ளது.

ஜாலான் புக்கிட் குடாவில் அமைந்துள்ள ஏமி குக்கீஸ் & ஃபூட் முன்புறமும் சிம்பாங் லோரோங் லிந்தாங் ரக்ஸா 2 சாலைகளில் தடுப்புக்காவல் போடப்பட்டுள்ளதாக வடக் கிள்ளான் காவல்துறை தலைவர் ஏசிபி நூருல்ஹூடா முகமட் சாலே இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“புக்கிட் குடாவில், லோரோங் பேராக், ஜாலான் ரக்ஸா 3 மற்றும் 4 சாலைகள் மூடப்படுகின்றன,” என அவர் மேலும் கூறியுள்ளார்.

லோரோங் லிந்தாங் ரக்ஸா 2, ஜாலான் ரக்ஸா 3 மற்றும் புக்கிட் குடா அடுக்குமாடி வீடுகளுக்குச் செல்லும் அல்லது அங்கிருந்து வெளியேரும் பொது மக்கள் காவல்துறையிடம் அனுமதி கடிதம் பெறவேண்டும் என்றும் நூருல் கூறியுள்ளார்.

“இருப்பினும், வடக் கிள்ளான் மாவட்டத்தின் மற்றப் பகுதிகளில் இந்த அனுமதி கடிதமும் சிறப்பு அனுமதியும் தேவையில்லை,” என்றார் அவர்.

எப்போதும் பிகேபிபி-ஐ கடைப்பிடிக்க வேண்டுமென்றும் கடைப்பிடிக்காத பொது மக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

ஏதேனும் கேள்விகள் அல்லது புகார்கள் இருப்பின், பொது மக்கள் ஒப் கோவிட் -19 செயல்பாட்டு அறையை 03-3376 2400 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் நூருல்ஹூடா தெரிவித்தார்.

  • பெர்னாமா