2021 வரவுசெலவு : பிரதமரைச் சந்திக்க எதிர்க்கட்சியினர் தயார், சலாவுதீன்

அடுத்த வெள்ளிக்கிழமை, மக்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ள 2021 வரவுசெலவுத் திட்டம் தொடர்பாக, பிரதமர் முஹைதீன் யாசினைச் சந்தித்துப் பேச, எதிர்க்கட்சியினர் தயாராக இருப்பதாக அமானா துணைத் தலைவர் சலாவுதீன் அயூப் தெரிவித்தார்.

“மக்கள் மற்றும் நாட்டின் நலன் கருதி, இந்த வரவுசெலவு திட்டத்தை நாங்கள் ஆதரிப்போம். மன்னர் இந்த அரசாங்கம் இயக்க வேண்டும், 2021 வரவுசெலவுத் திட்டம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார், எனவே எங்களை அழைத்துப் பேசுங்கள்.

“சிறந்த யோசனைகளை வழங்கக்கூடியக் குழு எங்களிடம் உள்ளது. நாங்கள் எந்த நேரத்திலும் தயாராக இருக்கிறோம், உடனடியாக அழைக்கவும்,” என்று அவர் நேற்று ஆஸ்ட்ரோ அவானிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

முன்னதாக, 2021 வரவுசெலவுத் திட்டம் குறித்து, முஹைதீனுடன் அதிகாரப்பூர்வ கலந்துரையாடலை நடத்த டிஏபி காத்திருக்கிறது என்று அந்தோனி லோக் கூறியிருந்தார்.

பட்ஜெட் விஷயங்களைப் பற்றி மற்ற கட்சிகளுடன் முறைசாரா பேச்சுவார்த்தை நடத்த பக்காத்தான் ஹராப்பன் (பி.எச்.) தலைமை குழு ஒப்புக் கொண்டதாகவும் லோக் மேற்கோளிட்டுள்ளார்.

இருப்பினும், பி.கே.ஆர். துணைத் தலைவர் சேவியர் ஜெயக்குமார், நேற்று வரவுசெலவுத் திட்டம் அங்கீகரிக்கும் ஒரு உடன்பாட்டை, நேற்று பி.எச். எட்டவில்லை என்று மறுத்தார்.

“நாங்கள் இன்னும் டிஏபியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். பி.எச். உறுப்புகட்சிகளுடன் கலந்தாலோசிக்காமல் டிஏபி மிக விரைவில் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது என்று நான் நினைக்கிறேன்,” என்று சேவியர் கூறினார்.

இதற்கிடையே, எதிர்க்கட்சிகளுக்கான ஒதுக்கீடுகள் நியாயமாகவும் சமமாகவும் வழங்கப்பட வேண்டும் என்றும் சலாஹுடின் வலியுறுத்தினார்.

“அனைத்து எம்.பி.க்களும் மக்களுக்காகப் பணியாற்றுகின்றனர். அரசாங்கத்தை ஆதரிக்கும் எம்.பி.க்களுக்கு மட்டுமே ஒதுக்கீடு வழங்கபடுவது நியாயமல்ல,” என்றும் அவர் கூறினார்.