பட்ஜெட் : எதிர்க்கட்சிகளுக்கு மானியம் வழங்குவது பி.என்.-ஐ கொல்வதற்குச் சமம் – தாஜுதீன்

இந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ள 2021 வரவுசெலவுத் திட்டத்திற்கு, எதிர்க்கட்சியினர் ஆதரவு அளிக்கின்றனர் என்பதற்காக மக்களவையில் உள்ள அரசாங்கப் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் அதே மானியத்தை எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கும் வழங்குவதை தேசிய முன்னணி (பிஎன்) ஏற்கவில்லை.

அம்னோ உச்சமன்ற உறுப்பினர் தாஜுதீன் அப்துல் ரஹ்மான் இந்த முன்மொழிவு – ஏற்றுக் கொள்ளப்பட்டால் – தேசிய முன்னணி ஒட்டுமொத்தமாக “கொல்லப்படுவதாக” அர்த்தம் என்றார்.

“நாங்கள் உடன்படவில்லை, அதை ஏன் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்? அது எங்களைக் கொன்றுவிடும்.

“அவர்கள் (பக்காத்தான் ஹராப்பான்) ஆட்சியில் இருந்தபோது, ​​எங்களுக்கு (ஒதுக்கீடு) கொடுக்கவில்லை,” என்று அவர் நேற்று கோலாலம்பூரில் நடந்த பிஎன் எம்.பி.-க்களின் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

தாஜுதீன் கருத்துப்படி, அவர்களின் கூட்டத்தில் இந்தப் பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், தேசியக் கூட்டணி அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்க, தேசிய முன்னணி உத்தரவாதம் அளித்துள்ளது என்று பாசீர் சாலாக் எம்.பி.யுமான அவர் வலியுறுத்தினார்

இதற்கிடையில், தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் அன்னுவார் மூசா, எம்.பி.க்களின் கூட்டத்தில் இந்த விடயம் தீவிரமாக விவாதிக்கப்படவில்லை என்றார்.