ஒவ்வொரு நாளும் நான், லிம்’மின் ‘அழுக்கு’ சிந்தனையில் இருக்கிறேன், நஜிப் கேலி

நவம்பர் 1-ம் தேதி, தேசிய முன்னணி அரசு ஆதரவாளர்கள் இயக்கத்தின் (பிஎன்பிபிசி) தலைவராக, நஜிப் ரஸாக் நியமிக்கப்பட்டதைப் பல முறை தொட்டுப் பேசிய டிஏபி மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங்கின் நடவடிக்கையைப் பற்றி முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தான், பிஎன்பிபிசி தலைவராகதான் நியமிக்கப்பட்டேன், டிஏபிபிபிசி தலைவராக அல்ல என்று கேலியாக அவர் கூறியுள்ளார்.

“திங்கள்கிழமை முதல், பிஎன்பிபிசி தலைவராக என்னை நியமித்ததற்கான பிஎன் முடிவு தொட்டு ‘அங்கிள்’ (லிம்) ஆறு முறை பேசியுள்ளார். கிட் சியாங்கிற்கு என் மீதான ஆவேசம் மிகவும் வலுவானது, அவர் என்னைப் பார்த்து மிகவும் பயப்படுகிறார்.

“இது பி.என்.பி.பி.சி, டி.ஏ.பி.பி.பி.சி அல்ல. அங்கிள் ’ளுக்குப் புரிகிறதா இல்லையா?” என்று அவர் இன்று தனது மூகநூல் பதிவு ஒன்றில் கூறினார்.

நவம்பர் 1-ம் தேதி, நஜிப் பிஎன்பிபிசியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், அதாவது அரசாங்கத்தில் சேர்க்கப்படாத பிஎன் எம்.பி.க்களின் தலைவராக.

அந்த முன்னாள் பிரதமருக்கு, இம்முறை மக்களவை அமர்வில், ஒரு முக்கிய பங்கு வழங்கப்பட்டுள்ளது, குறிப்பாக 2021 வரவு செலவு திட்ட விவாதத்தின் போது என்று மலேசிய இன்சைட் அறிக்கை கூறியுள்ளது.

இதற்கிடையில், நஜிப் தான் வகிக்கும் இப்பதவி அரசாங்க நியமனம் அல்ல என்றும் அதற்கு ஊதியம் எதுவும் வழங்கப்படவில்லை என்றும் லிம்முக்கு நினைவுபடுத்தினார்.

“இது அரசாங்க நியமனம் அல்ல, ஊதியம் இல்லாதப் பதவி. மக்களவையில் பிஎன் எம்.பி.க்களின் வாதங்களைக், குறிப்பாக 2021 வரவு செலவு விவாதங்களைத்  திட்டமிடுவதே என் வேலை.

“மற்றவர்கள் ஒவ்வொரு நாளும் கோவிட் -19 பிரச்சினை மற்றும் ஏழை மக்களுக்கானப் பொருளாதார உதவிகள் பற்றி நினைக்கிறார்கள். ஆனால், நான் ஒவ்வொரு நாளும் இந்த வயதான அங்கிளின் ‘அழுக்கு’ சிந்தனையில் இருக்கிறேன்,” என்று அவர் கூறினார்.