அன்வர் : 10,000 சிற்றுண்டிச்சாலை தொழில்முனைவோரின் தலைவிதி என்ன?

சிற்றுண்டிச்சாலை தொழில்முனைவோரின் தலைவிதியைப் பொருட்படுத்தாமல், இவ்வாண்டு இறுதி வரை பள்ளியை மூடிய தேசியக் கூட்டணி அரசாங்கத்தை பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிம் விமர்சித்தார்.

“டிசம்பர் 17-ம் தேதி வரை, பள்ளிகள் மூடப்படும் என்ற அறிவிப்பால், நாடு முழுவதும் 10,000-க்கும் மேற்பட்ட சிற்றுண்டிச்சாலை தொழில்முனைவோர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என நான் அறிவேன். தினசரி இயக்க செலவுகளின் சுமையைத் தாங்க முடியாமல், இவர்கள் தங்கள் வணிகத்தைக் கட்டாயத்தின் பேரில் மூடிவிடுவார்களோ என்று அஞ்சப்படுகிறது.

“இவர்களின் தலைவிதியைப் பொருட்படுத்தாமல், அவசரமாக எடுக்கப்பட்ட அரசாங்கத்தின் முடிவு ஏமாற்றமளிக்கிறது,” என்று அன்வர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“அரசாங்கத்திடம், குறிப்பாக கல்வி அமைச்சரிடம், இந்த விவகாரம் குறித்து தெளிவுபடுத்தவும் உடனடி நடவடிக்கை எடுக்கவும் நான் கோருகிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.

அவர்களுக்கு உதவி மானியங்கள் வழங்குவதோடு, அவர்களின் சேவை ஒப்பந்தங்களையும் நீட்டிக்க வேண்டும் என்று அன்வர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

“ஒரு முடிவை எடுப்பதற்கு முன், ஒவ்வொரு அம்சத்தையும் சிந்தித்து ஆராயுமாறு நான் அரசாங்கத்திற்கு அறிவுறுத்துகிறேன், இது மக்களை மிகவும் கவர்ந்திழுக்கும், குறிப்பாக, இன்று இதுபோன்ற கடினமான காலகட்டங்களில்,” என்று அவர் கூறினார்.