‘மக்களவைக் கூட்டத்தொடர் சீராக நடைபெற வேண்டும்`, பிந்துலு எம்.பி. மன்னிப்பு கேட்டுக்கொண்டார்

கடந்த வாரம், மக்களவையில் நடைபெற்ற பட்ஜெட் 2021 விவாத அமர்வின் போது, சர்ச்சையை ஏற்படுத்திய தனது அறிக்கைக்காக, பிந்துலு எம்பி தியோங் கிங் சிங் மன்னிப்பு கேட்டார்.

“மக்களவையின் சீரான ஓட்டத்தை” உறுதி செய்வதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக அவர் விளக்கினார்.

“மக்களவை அமர்வு சீராக நடப்பதை உறுதி செய்வதற்கும், நாட்டின் நலன் மற்றும் நல்லிணக்கத்துக்காகவும், 2021 பட்ஜெட் விவாதத்தின் போது சர்ச்சையை ஏற்படுத்திய எனது சொற்களுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

“சுகாதாரத் தலைமை இயக்குநர் உட்பட, அனைத்து மருத்துவர்கள், தாதியர் மற்றும் முனைமுகப் பணியாளர்கள் ஆகியோரின் உன்னத செயல்பாட்டை மறுப்பது எனது நோக்கம் அல்ல,” என்று அவர் இன்று ஓர் ஊடக அறிக்கையில் அவர் தெரிவித்தார்.

மக்களைக் கவலையடையச் செய்யும் கோவிட் -19 பிரச்சினையை மட்டுமே தான் விவாதிக்க விரும்பியதாகத் தியோங் கூறினார்.