கோவிட் 19 : இன்று 1,208 புதியத் தொற்றுகள், முதலிடத்தில் கோலாலம்பூர்

நாட்டில், இன்று நண்பகல் வரையில், 1,208 கோவிட் -19 புதியத் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன, தொடர்ந்து மூன்றாவது நாளாக 1,000 -த்திற்கும் அதிகமான பாதிப்புகள் பாதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இன்றையப் புதிய பாதிப்புகளில் பெரும்பகுதி கோலாலம்பூரில் பதிவு செய்யப்பட்டுள்ளன, அதாவது 475 புதிய நேர்வுகளை அது பதிவு செய்துள்ளது, இது சபாவை விட (381) அதிகமாகும்.

சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, கோலாலம்பூரில் பதிவாகியப் புதிய நேர்வுகளில் பெரும்பகுதி வெளிநாட்டு தொழிலாளர்களின் தங்குமிடங்களிலிருந்து (டாமான்லேலா திரளை – கட்டுமானப்பணி இடம்) வந்தவை எனக் கூறியுள்ளார்.

தொடர்ந்து ஏழாவது நாளாக, தீபகற்பத்தில், கோவிட் -19 தினசரி புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை கிழக்கு மலேசியாவைவிட அதிகமாக உள்ளதாகவும் அவர் சொன்னார்.

சபா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்ட நிலையில், சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானில் தொற்றின் விகிதம் அதிகமாகவே உள்ளது.

அவசரப் பிரிவில் 104 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 42 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

இன்று 1,013 பேர் இந்நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், சபாவில் 3 மரணங்கள் நேர்ந்துள்ளன. இறந்தவர்களில் 8 வயது பெண் குழந்தை ஒருவரும் அடங்குவார்.

கோலாலம்பூர் மற்றும் சபாவை அடுத்து, மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-

சிலாங்கூரில் 185, நெகிரி செம்பிலான் 48, பினாங்கில் 42, லாபுவானில் 30, பேராக்கில் 21, ஜொகூரில் 9, கெடாவில் 8, சரவாக்கில் 4, கெடாவில் 3, மலாக்காவில் 2, பெர்லிஸ், புத்ராஜெயா மற்றும் கிளந்தானில் 1.

திரெங்கானு மற்றும் பஹாங்கில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை.

மேலும் இன்று, 3 புதியத் திரளைகள் (சபா 2 & ஜொகூர் 1) அடையாளம் காணப்பட்டுள்ளன.