பி.கே.பி.யின் போது 49 வெளிநாட்டினர் தற்கொலை செய்துகொண்டனர்

இவ்வாண்டு மார்ச் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் 49 வெளிநாட்டினர் தற்கொலை செய்துகொண்டனர்.

அவர்களில் பெரும்பாலானோர், மலேசியாவிற்கு மனிதவளத்தை ஏற்றுமதி செய்யும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

புக்கிட் அமான் வழக்கு மற்றும் சட்டப்பிரிவு பகிர்ந்துள்ள புள்ளிவிவரங்களின்படி, அதிகம் தற்கொலை செய்து கொண்டவர்கள் பட்டியலில் மியான்மர் நாட்டவர்கள் முதல் நிலையில் உள்ளனர் (14), அதனையடுத்து வங்களாதேசம் (9), இந்தோனேசியா (6), இந்தியா (5) மற்றும் பாகிஸ்தான் (2).

பிரிட்டன், வியட்நாம் மற்றும் ஆஸ்திரேலியா குடிமக்கள் தலா ஒரு மரணம் பதிவு செய்துள்ளனர். இறந்த ஒரு வெளிநாட்டவரின் குடியுரிமையை அடையாளம் காண முடியவில்லை.

மரணத்திற்கான காரணங்கள் யாவும், கிட்டத்தட்ட நிதி மற்றும் குடும்பப் பிரச்சினைகள் (48 வழக்குகள்) தொடர்பானவை. ஒரே ஒரு வழக்கு மட்டுமே மனநலப் பிரச்சினையை உள்ளடக்கியது.

பெரும்பாலான தற்கொலை வழக்குகள் ‘கொங்சி’களில் (பகிர்ந்து வசிக்கும் வீடுகளில்) நடந்ததாக போலீஸ் வட்டாரங்கள் மலேசியாகினியிடம் தெரிவித்தனர்.

அவர்களில் பெரும்பாலோர் வெளிநாட்டு தொழிலாளர்கள் என்று போலீசார் நம்புகின்றனர். இறந்தவர்களில் மூன்று பேரிடம் சரியான ஆவணங்கள் இல்லை.

‘திடீர் மரணம்’ என்ற அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது.

மாநிலம் வாரியாக இறந்தவர் எண்ணிக்கை, கோலாலம்பூரில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் (14 வழக்குகள்) பதிவாகியுள்ளன, பேராக் (9), பினாங்கு (7), ஜொகூர் (4), சரவாக் (4), சிலாங்கூர் (3), பஹாங் (3), மலாக்கா (2).  திரெங்கானு (1) , கிளந்தான் (1) மற்றும் சபா (1).

மார்ச் 18-ல், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.) அறிமுகப்படுத்தப்பட்டபோது, ​​ஒரே ஒரு தற்கொலை வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தது.

இருப்பினும், அதன் பின்னர் இறந்தவர்களின் எண்ணிக்கை உயரத் தொடங்கியது.

ஏப்ரல் மாதத்தில் ஆறு வழக்குகள் பதிவாகின, மே மற்றும் செப்டம்பரில் எட்டு இறப்புகள் என அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளன.

ஜூன், ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில் ஏழு வழக்குகளும், ஜூலை மாதம் ஐந்து வழக்குகளும் பதிவாகியுள்ளன.