அஹ்மத் ஃபைசல் நம்பிக்கை வாக்குகளைப் பெறத் தவறிவிட்டார்

இன்று, பெர்சத்து துணைத் தலைவரும் செண்டிரியான் சட்டமன்ற உறுப்பினருமான அஹ்மத் பைசல் அஸுமு நம்பிக்கை வாக்கெடுப்பில், மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெறத் தவறிவிட்டார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் 10 பேர் அவரை ஆதரித்த நிலையில், 48 வாக்குகள் அவரை நிராகரித்தன. ஒன்று நடுநிலை வாக்கு.

இந்தக் கோரிக்கையை, அம்னோவைச் சேர்ந்த பெங்காலான் பாரு சட்டமன்ற உறுப்பினர் அப்துப் மனாஃப் ஹாஷிம் கொண்டு வந்தார். பேராக் 2021 பட்ஜெட்டைத் தாக்கல் செய்தபின்னர், இந்தப் பிரேரணை முதலில் விவாதத்திற்கு பட்டியலிடப்பட்டது.

முடிவு அறிவிக்கப்பட்டவுடன் ஆற்றிய உரையில், பேராக் சட்டமன்ற உறுப்பினர்கள் எடுத்த முடிவை தான் ஏற்றுக்கொண்டதாக அஹ்மத் பைசல் கூறினார்.

மந்திரி பெசார் அதிகாரப் பரிமாற்றம் சீராக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

“நான் இந்த அரசுக்குச் சேவை செய்ததில் பெருமிதம் கொள்கிறேன், பேராக் சுல்தானுக்குச் சேவை செய்ய வாய்ப்பளித்ததற்கு நன்றி,” என்று அவர் கூறினார்.