கோவிட் 19 : இன்று 1,012 புதியத் தொற்றுகள், மோசமான நிலையில் சிலாங்கூர்

நாட்டில், இன்று நண்பகல் வரையில், 1,012 கோவிட் -19 புதியத் தொற்றுகள் பதிவான நிலையில், 4 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதேவேளையில், 1,750 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சிலாங்கூர் மாநிலம் அதிகப் பாதிப்புகளைப் பதிவு செய்துள்ளது.

சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா சார்ந்த கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதிகளில், 57.7 விழுக்காடு புதியப் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

சபாவில் நான்கு இறப்புகள் பதிவாகியுள்ளன. சபாவுக்கான ஒட்டுமொத்த கோவிட் -19 இறப்பு எண்ணிக்கை தேசிய மொத்தத்தில் (388) 224 அல்லது 57.7 விழுக்காட்டை எட்டியுள்ளது.

மலாக்கா, திரெங்கானு, லாபுவான் மற்றும் பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை எனச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

அவசரப் பிரிவில் 126 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 62 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-

சிலாங்கூரில் 417, சபாவில் 271, ஜொகூரில் 108, கோலாலம்பூரில் 98, பஹாங்கில் 33, நெகிரி செம்பிலானில் 23, கெடாவில் 10, பினாங்கில் 18, பேராக்கில் 29, கிளந்தான் மற்றும் சரவாக்கில் தலா 2, புத்ராஜெயாவில் 1.

மேலும் இன்று, 2 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை :-

செருலிங் திரளை – சிலாங்கூர், உலு சிலாங்கூர் & கிள்ளான், பெட்டாலிங் மாவட்டங்கள்; 3 மாநிலங்களை உள்ளடக்கிய, டாருல் கட்டுமானத் தளத் திரளை – கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசத்தில் தித்திவங்சா, செராஸ், லெம்பா பந்தாய் மாவட்டங்கள் , சிலாங்கூர் மாநிலத்தில் பெட்டாலிங், செப்பாங், கோல லங்காட் & கிள்ளான் மாவட்டங்கள் & நெகிரி செம்பிலானில் சிரம்பான் மாவட்டம்.