அன்னுவார் : அன்வர், டிஏபிக்கு எதிரான அம்னோவின் நிலைப்பாட்டை மாற்ற சிலர் விரும்புகிறார்கள்

பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிம் மற்றும் டிஏபி ஆகியோருடன் ஒத்துழைக்க வேண்டாம் என்ற அம்னோவின் நிலைப்பாட்டை மாற்றும் முயற்சிகள் நடப்பதாக தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அன்னுவார் மூசா தெரிவித்தார்.

இந்த நிலைப்பாட்டை அம்னோ கூட்டாளிகளும் ஏற்றுக் கொண்டனர், ஆனால் சில தரப்பினர் மெதுவாக இந்த நிலைப்பாட்டை துடைத்தொழிக்க முயற்சிக்கின்றனர் என்று அன்னுவார் கூறினார்.

“சட்டரீதியான  அறிவிப்புகள் (எஸ்டி) சேகரிக்கப்பட்டு வருகின்றன, தூண்டுதல் தொடர்கிறது, அரசாங்கத்தின் மீது கோபத்தை உண்டுபன்னும் காரணங்கள் வடிவமைக்கப்படுகின்றது, அரண்மனை மற்றும் அரசப் பரம்பரையுடனான பெயர்களும் பயன்படுத்தப்படுகின்றன,” என்று அவர் இன்று முகநூல் பதிவில் தெரிவித்தார்.

அன்னுவார் தான் குறிப்பிடும் நபரின் பெயரை அவர் சொல்லவில்லை.

பேராக் அரசாங்கத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, டிஏபி உள்ளிட்ட பி.எச்.-உடன் அம்னோ பேச்சுவார்த்தை நடத்திய ஒரு வாரத்திற்குள் அன்னுவரின் அறிக்கை வெளிவந்துள்ளது.

பேச்சுவார்த்தைகள் பலனளிக்கவில்லை என்றாலும், நீண்டகால போட்டியாளர்களான இரு கட்சிகளும் ஒரே மேஜையில் உட்காரத் தயாராக உள்ளனவா என்றக் கேள்வியை அது எழுப்பியது.

 

இதற்கிடையில், ஜொகூர் அம்னோ துணைத் தலைவர் நூர் ஜஸ்லான் மொஹமட், அரசாங்கத்தில் ஆதிக்கம் செலுத்தும் கட்சியாக மாறுவதில் தொடர்ந்து பெர்சத்து ஆர்வமாக இருந்தால், தேசியக் கூட்டணி உடனான ஒத்துழைப்பை முடிவுக்கு கொண்டு வரவும், அடுத்த தேர்தலில் தனியாக போட்டியிடவும் அல்லது பக்காத்தான் ஹராப்பானுடன் (பிஎச்) பணியாற்றவும் அம்னோ தயங்கக்கூடாது என்று இன்று எச்சரித்தார்.

தற்போதைய அரசியல் யதார்த்தத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு, ஜிஇ15-ல் பி.எச்.-உடன் ஒத்துழைப்பதற்கான விருப்பத்தை அம்னோ உறுப்பினர்கள் கருத்தில் கொள்ளவேண்டும் என்று நூர் ஜஸ்லான் கூறியுள்ளார்.

அம்னோ, பி.கே.ஆர். மற்றும் டிஏபி இடையே முன்மொழியப்பட்ட ஒத்துழைப்பு “ஒரு மோசமான யோசனையாக இருக்காது”, ஏனெனில் மலேசியா முன்னேறவும், உலகளவில் ஒரு முற்போக்கான நாடாக ஏற்றுக்கொள்ளவும் அனைத்தையும் உள்ளடக்கிய ஓர் அரசாங்கம் தேவை.

“90 விழுக்காட்டிற்கும் அதிகமான மலாய்க்காரர்களைக் கொண்ட ஓர் அரசாங்கம் (இப்போது போல) இருப்பது ஆரோக்கியமானதல்ல அல்லது நாட்டுக்கு அது நல்லதல்ல.

“அரசாங்கத்தில் உள்ள பதவிகளைப் பொறுத்தவரை மலாய் அல்லாதவர்களை நாம் விலக்க முடியாது,” என்று அவர் கூறினார்.

கொள்கை மற்றும் ஆளுமை சம்பந்தப்பட்ட பல விஷயங்களில் அம்னோ மற்றும் டிஏபி விரோதமாக இருந்தாலும், இரு கட்சிகளின் தேர்தல் அரசியலில், அவை பெரும்பாலானப் பகுதிகளில் மோதவில்லை.

ஏனென்றால், இரு கட்சிகளும் மிகவும் வித்தியாசமான வாக்காளர்களைக் கொண்டுள்ளன.

அதற்கு பதிலாக, பெர்சத்து மற்றும் பாஸ்-உடன் இணைந்தால், அம்னோவுடன் அவற்றிற்குப் பல ஒற்றுமை உள்ளது, ஏனெனில் மூன்று கட்சிகளும் மலாய்க்காரர்கள் மற்றும் இஸ்லாத்தின் வாக்குகளைப் பெறவே போட்டியிடும்.