மூத்த எழுத்தாளர் சாமிமூர்த்தி காலமானார்

மலேசியாவின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரான சாமிமூர்த்தி என்ற மூர்த்தி ஐயாகன்னு இன்று  (0138:13.12.2020) அதிகாலையில் காலமானார். இவர் யுனிவர்சிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக இவரின் மகன் சரவணன் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

1960 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டு வந்தவர். பெரும்பாலும் சிறுகதைகள், திறனாய்வுக் கட்டுரைகள் போன்றவற்றை முற்போக்கும், சமூகப் பார்வையுடனும் எழுதியவர்.

இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசியப் பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

இவர் உரிமைகளை முன்னணியாக வைத்து இயங்கிய செம்பருத்தி மாத இதழில் ஆசிரியராகவும் துணையாசிரியராகவும் செயல்பட்டவர்.

எண்பதுகளில் “இலக்கியச் சிந்தனை” என்னும் அமைப்பினைத் தோற்றுவித்து நடத்திய இவர் “அகம்” என்னும் இலக்கிய அமைப்பு உட்படப் பல்வேறு வகையில் தன்னை  ஈடுபடுத்திக்கொண்டு  மலேசிய இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றியுள்ளார்.

“நேர் கோடுகள்” (சிறுகதைகள்), “சாமி மூர்த்தி சிறுகதைகள்” (2001) என்றத்தொகுப்பின் வழியாகத் தனது எழுத்துகளை உலகுக்கு அறிமுகப்படுத்திய இவர் தமிழ் நேசன் பத்திரிகையின் தங்கப் பதக்கம் உட்படப் பல இலக்கியச் சார்ந்த பரிசுகளையும் அங்கீகாரியத்தையும் பெற்றவர்.

அன்னாரின் இறுதிச்சடங்குகள் இன்று பிற்பகலில் நடைபெறும் என்று அவரின் மகன் குறிப்பிட்டுள்ளார்.

அன்னாரின் குடும்பத்தினர்களுக்கு மலேசியாஇன்று நிருவாகத்தினர் தங்களின் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றனர். “அன்னாரின் மறைவு மலேசிய எழுத்துலகத்திற்கு ஒரு ஈடுகட்ட இயலாத இழப்பாகும்”.

மேல் தகவல் பெற சரவணன் – 012 2109723  முத்து – 012 9037562 ஆகியோருடன் தொடர்பு கொள்ளவும்.