கோவிட் 19 : இன்று 1,581 புதிய நேர்வுகள், ஒட்டுமொத்த எண்ணிக்கை 100,000 மிஞ்சியது

சுகாதார அமைச்சு இன்று, 1,581 புதிய கோவிட் -19 நேர்வுகள் பதிவான நிலையில், நாட்டில் ஒட்டுமொத்தமாக இதுவரை 100,318 பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக அறிவித்துள்ளது.

புதிய பாதிப்புகளில், கிள்ளான் பள்ளத்தாக்கில் 55.3 %, சபாவில் 15.7 % மற்றும் நெகிரி செம்பிலானில் 9.1% எனப் பதிவாகியுள்ளன.

இன்று, 1,085 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 102 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 45 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் டிசம்பர் 27 வரையில், சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் செய்தியாளர் சந்திப்பை நடத்தமாட்டார் எனத் தெரிகிறது.

இன்று, சண்டகானில் 61 வயது நிரம்பிய முதியவர் ஒருவரும், லாஹாட் டத்துவில் 15 வயது நிரம்பிய சிறுமி ஒருத்தியும் இந்நோய்க்குப் பலியாகியுள்ளனர்.

பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை.

மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-

சிலாங்கூரில் 491, கோலாலம்பூரில் 379, சபாவில் 249, நெகிரி செம்பிலான் 144, ஜொகூரில் 115, மலாக்காவில் 76, பினாங்கில் 37, பேராக் மற்றும் லாபுவானில் தலா 26,  பஹாங்கில் 12, கிளந்தானில் 9, திரெங்கானுவில் 7, கெடா மற்றும் புத்ராஜெயாவில் தலா 4, சரவாக்கில் 2.

மேலும் இன்று, 4 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை :-

கெபுன் பாரு திரளை – சிலாங்கூர், கோல லங்காட் மாவட்டம்; சுங்கை புரோங் திரளை – சிலாங்கூர், கோல சிலாங்கூர் மாவட்டம்; ஜாலான் பண்டான் திரளை – கோலாலம்பூர் & சிலாங்கூரைச் சேர்ந்த சில மாவட்டங்கள்; ஜாலான் துன் கட்டுமானத்தளத் திரளை – கோலாலம்பூர், லெம்பா பந்தாய் மாவட்டம்.