அவசரநிலை சுயாதீனக் குழுவில், சைஃபுதீன், லோக், சுல்கிஃப்ளி

அவசரகால அமலாக்கத்தைப் பற்றி பேரரசருக்குப் பரிந்துரைகளை வழங்குவதற்காக சுயாதீனச் செயற்குழுவில் இணைய பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) தனது பிரதிநிதிகளின் பெயர்களைச் சமர்ப்பித்தது.

பி.எச். செயலகச் சபை இன்று வெளியிட்டுள்ல அக்கூட்டு அறிக்கையில், மூன்று பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

அவர்கள், கூலிம் பண்டார் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் சைஃபுதீன் நாசுதியோன் இஸ்மாயில், அந்தோனி லோக் (சிரம்பான்) மற்றும் டாக்டர் சுல்கிஃப்ளி அஹ்மத் (கோல சிலாங்கூர்).

எவ்வாறாயினும், சம்பந்தப்பட்ட சுயாதீனக் குழுவில் எதிர்க்கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றாலும், அவசரகாலத் தேவை குறித்து பிரதமர் அளித்த காரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்ற தங்கள் நிலைப்பாட்டை மாற்றவில்லை என அந்த அறிக்கையில் பி.எச். தெளிவுபடுத்தியுள்ளது.

“இந்த அவசரநிலை முடிவுக்கு வர வேண்டும், உடனடியாக நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்களும் பெரும்பான்மையான எம்.பி.க்களும் இருக்கிறோம்,” என்று அவர்கள் கூறியுள்ளனர்.