இன்று 3,680 புதிய நேர்வுகள், அவசரப் பிரிவில் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு

கோவிட் 19 | நாட்டில் இன்று, 3,680 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்தது.

தீவிரச் சிகிச்சைப் பிரிவில், நோயாளிகளின் எண்ணிக்கை இன்று 314 ஆக உயர்ந்தது, 122 பேர் சுவாசக் கருவியின் உதவியுடன் சுவாசிக்கின்றனர்.

கிள்ளான் பள்ளத்தாக்கில் அதிக எண்ணிக்கையிலானப் புதிய பாதிப்புகள் (41.6 விழுக்காடு) பதிவாகியுள்ளன. மாநிலங்களில் முதல் இடத்தில் ஜொகூர் உள்ளது.

ஜொகூரில் புதிய வழக்குகளில் பெரும்பாலானவை, ஆறு புதியப் பணியிடத் திரளைகளிலிருந்து வந்தவை.

இதற்கிடையே, இன்று 1,858 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 7 மரணங்கள் சம்பவித்துள்ளன. ஆக, நாட்டில் இதுவரை 707 நோயாளிகள் இந்நோய்க்குப் பலியாகியுள்ளனர்.

நாட்டில் இன்று அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :- ஜொகூர் (1,069), சிலாங்கூர் (822), கோலாலம்பூர் (698), சபா (295), பேராக் (181), நெகிரி செம்பிலான் (112), பினாங்கு (101), கெடா (76), சரவாக் (70), திரெங்கானு (68), மலாக்கா (63), கிளந்தான் (60), பஹாங் (42), புத்ராஜெயா (19), பெர்லிஸ் (3), லாபுவான் (1).

மேலும் இன்று 17 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன. ஜொகூரில் 6, கோலாலம்பூரில் 4, சிலாங்கூரில் 3, பேராக்கில் 2, சரவாக் மற்றும் சபாவில் தலா 1.

புதியத் திரளைகளில், 15 திரளைகள் பணியிடம் சார்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.