இ.ஐ.யு. ஜனநாயகக் குறியீட்டில் மலேசியாவுக்குச் சிறந்த இடம்

பொருளாதார நிபுணர் புலனாய்வு பிரிவின் (இ.ஐ.யு.) ஜனநாயகக் குறியீடு 2020 பதிப்பில், மலேசியா முதல் நான்கு இடங்களுக்கு முன்னேறியுள்ளது.

இது நாடு இதுவரை பதிவு செய்த மிக உயர்ந்த நிலையாகும்.

`தி எகனாமிஸ்ட்` வெளியிடும் அதே நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவான இ.ஐ.யு.-ஆல் பட்டியலிடப்பட்ட 167 நாடுகளில் மலேசியா தற்போது 39-வது இடத்தில் உள்ளது.

“மார்ச் 2020-ல், டாக்டர் மகாதீர் மொஹமட் பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததிலிருந்து, மலேசியாவில் அரசியல் நிலைத்தன்மை மோசமடைந்துள்ளது.

“ஆயினும்கூட, தேர்தல் செயல்பாட்டில் சீர்திருத்தங்கள் மற்றும் பன்மைத்துவத்தின் முன்னேற்றங்கள் ஆகியவை அதிகமான ஜனநாயக அரசியல் நிறுவனங்களை ஏற்படுத்தியுள்ளன,” என்று இ.ஐ.யு. இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

39-வது இடத்தில், மலேசியா லாட்வியா`வுக்குப் பின்னால், பனாமா`வை விட முன்னிலையில் உள்ளது. ஆசியா மற்றும் ஆஸ்ட்ராலேசியா நிலப்பரப்பில், மலேசியா ஆறாவது இடத்திலும், தென் கொரியாவுக்குப் பின்னாலும், திமோர்-லெஸ்தே`வுக்கு முன்னிலையிலும் உள்ளது.

இ.ஐ.யு. மலேசியாவிற்கு அதிகபட்சமாக, 10-இல் 7.19 புள்ளிகளைக் கொடுத்துள்ளது; பிரான்ஸ், அமெரிக்கா, சிங்கப்பூர் மற்றும் கயானா போன்ற நாடுகளுடன் “பலவீனமான ஜனநாயகம்” என்று நாட்டை வகைப்படுத்தியது.

மலேசியா “தேர்தல் செயல்முறை மற்றும் பன்மைத்துவத்தில்” வெற்றிகரமாக இருப்பதாக இ.ஐ.யு. கருதுகிறது; எனவே நமது நாட்டிற்கு 9.8 மதிப்பெண்களை அது வழங்கியது – அதே மதிப்பெண் சுவிட்சர்லாந்திற்கு வழங்கப்பட்டது; தென் கொரியா (9.17), ஜப்பான் (8.75) ஆகியவற்றைத் தோற்கடித்தது.

“அரசாங்கத்தின் செயல்பாடு”, “அரசியல் பங்கேற்பு” மற்றும் “அரசியல் கலாச்சாரம்” ஆகியவற்றிற்கான மதிப்பெண்கள் முறையே 7.86, 6.67 மற்றும் 6.25 ஆக மாறாமல் இருந்தன.

“சமூக உரிமைகள்” (civil liberties) பிரிவில், மலேசியாவின் செயல்திறன் மோசமாக இருந்தது, அது 5.59 என மதிப்பிடப்பட்டது – இஸ்ரேல், துனிசியா மற்றும் லெசோதோ ஆகிய நாடுகளின் அதே அடைவுநிலை – முந்தைய ஆண்டு 5.88 ஆக இருந்ததிலிருந்து குறைந்து காணப்படுகிறது.