சலாவுதீன் : டெல்கோ நிறுவனங்கள் பி.டி.பி.ஆர்-க்குச் சிறப்பு தொகுப்பு ஒன்றை வழங்க வேண்டும்

தற்போதையக் கோவிட் -19 தொற்றுநோயைத் தொடர்ந்து, பெரும்பாலான மாணவர்கள் தங்கள் வீடுகளில் இயங்கலை வகுப்புகளை மேற்கொள்வதால், இணையத் தரவுகளின் விலையைக் குறைக்குமாறு பூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் சலாவுதீன் அயூப் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு, குறிப்பாக கிராமப்புறங்களில் இல்லமிருந்து கற்பித்தல் மற்றும் கற்றலுக்கான (பி.டி.பி.ஆர்.) உபகரணங்களைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்கிறார் என்றார் அவர்.

இந்தக் குழுவினர் மீது கவனம் செலுத்தும், ஒரு சிறப்பு தொகுப்பு அல்லது திட்டத்தைத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அறிமுகம் செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

“அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களுக்காக காத்திருக்க வேண்டாம். அவர்கள் (தொலைத்தொடர்பு நிறுவனங்கள்) இந்த மக்கள் சிக்கலில் இருக்கும்போது (ஏதாவது) செய்ய முன்வர வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.

“சிறிது காலத்திற்கு மட்டுமே, கோவிட் -19 பாதிப்பின் போது, ​​நம் குழந்தைகள் இயங்கலையில் கற்றலை அணுக வழிகாண,” என்று அவர் இன்று மலேசியாகினியிடம் கூறினார்.