சாராணி : ‘அம்னோ, பாஸ் இடங்களைத் தொந்தரவு செய்யாதீர்கள்’

கடந்த 14-வது பொதுத் தேர்தலில் (ஜி.இ.), அம்னோ வென்ற தொகுதியில் போட்டியிட வேண்டாம் என்று பேராக் அம்னோ தொடர்பு குழுத் தலைவர் சாராணி மொஹமட் பெர்சத்து கட்சியிடம் தெரிவித்தார்.

அடுத்த ஜி.இ.15-இல், அந்த அனைத்து நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடங்களிலும் அம்னோ மீண்டும் போட்டியிடும் என்று பேராக் மந்திரி பெசாருமான சாராணி வலியுறுத்தினார் என்று சினார் ஹரியான் தெரிவித்தார்.

“பேராக்கில் கட்சிகளுக்கிடையிலான ஒற்றுமையை ஆதரிக்கும் எண்ணம் இருந்தால், அம்னோ மற்றும் பாஸ் இடத்தைத் தொந்தரவு செய்ய வேண்டாம்.

“பேரக்கில் இப்போது பெர்சத்துவைச் சார்ந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர், அதாவது சுங்கை மானிக் மற்றும் துவாலாங் சேகா. அந்த இருக்கைகள் உண்மையில் அம்னோவுக்குச் சொந்தமானது. எனவே, அம்னோ அந்தத் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்துவார்.

“லாருட், பாகான் செராய் மற்றும் புக்கிட் கந்தாங் நாடாளுமன்றங்களிலும் போட்டியிட வேண்டாம் என்று பெர்சத்துவுக்கு வலியுறுத்துகிறோம். அவையும் அம்னோவின் தொகுதிகளாகும்.

“நாங்கள், பாரிசான் நேஷனல் டிக்கெட்டில், 14-வது பொதுத் தேர்தலின் போது அவ்விடங்களை வென்றோம். எனவே, நாங்கள் பெர்சத்துவுடன் அவ்விடங்களைப் பகிர்ந்துகொள்ள மாட்டோம். எந்த சமரசமும் இல்லை,” என்றார் அவர்.

 

ஜிஇ15-இல் பி.என் புதைக்கப்படுமா?

அடுத்தப் பொதுத் தேர்தலில், பி.எச். வைத்திருக்கும் இடங்களில் போட்டியிடுமாறு பெர்சத்துவுக்கு அந்த கோத்த தம்பான் சட்டமன்ற உறுப்பினர் பரிந்துரைத்தார்.

“அம்னோ மற்றும் பாஸ் இடங்களைத் தொந்தரவு செய்யாமல், புதிய இடங்களைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள்.

“இல்லையெனில், எதிர்பார்த்தபடி, மும்முனை அல்லது நான்கு முனைகளில் போட்டிகள் இருக்கும். அது நடந்தால், நிச்சயமாக, மற்றவர்களுக்கு அது ஒரு வாய்ப்பாக அமையும், மலாய் கட்சிகள் வீழ்ச்சியடையும்,” என்று அவர் கூறினார்.

ஜிஇ15-இல் தேசியக் கூட்டணி (பி.என்.) புதைப்படும் சாத்தியமில்லை என்று சாராணி கூறியதாக சினார் ஹரியன் மேற்கோள் காட்டியது.

“இது நடக்கக்கூடும், ஏனென்றால் மலாய் வாக்காளர்கள் அதிகம் உள்ள இடங்களில் மும்முனை போட்டிகள் இருக்கும். தித்தி செரோங் சட்டமன்றத்தில் நடந்ததை ஓர் எடுத்துக்காட்டாக எடுத்துக்கொள்வோம்.

“பாஸ், அம்னோ மற்றும் அமானா ஆகிய கட்சிகளின் மூன்று மலாய் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அங்குள்ள மலாய்க்காரர்கள் சுமார் 60 விழுக்காட்டினர், மீதமுள்ளவர் மலாய்க்காரர்கள் அல்லாதவர்கள்.

“எனவே, மலாய்க்காரர்கள் மூன்றாகப் பிரிக்கப்பட்டனர். அநேகமாக, 20 விழுக்காட்டினர் பாஸ், 30 விழுக்காட்டினர் அம்னோவையும், 10 விழுக்காட்டினர் அமனாவையும் ஆதரித்திருக்கலாம். ஆனால், மலாய் அல்லாதவர்களின் ஆதரவு பி.எச்.-ஐ சார்ந்த அமானாவுக்குக் கிடைத்தது.

“எனவே, அமானா வென்றது, பாஸ் மற்றும் அம்னோ தோற்றது. பி.எ. என்ற பெயரில் அமனா வென்றது, டிஏபி-யின் ஆதரவுடன்,” என்று அவர் ஜிஇ15-இல் பிஎன் எதிர்காலம் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்தார்.