பி.என். வழங்கியப் பதவிகளை ஏற்றுக்கொண்ட 8 உறுப்பினர்களை டிஏபி நீக்கியது

தேசியக் கூட்டணி (பி.என்.) வழங்கியப் பதவிகளை ஏற்றுக்கொண்ட, அதன் ஏழு உறுப்பினர்களின் உறுப்பியத்தைப் பேராக் டிஏபி நீக்கியது.

அவர்கள் ஏழு பேரும், அவரவர் கிராமங்களில் கிராம அபிவிருத்தி மற்றும் பாதுகாப்புக் குழுத் தலைவர் என்றப் பதவியை ஏற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

மாலிம் நவார் சட்டமன்ற உறுப்பினர், லியோங் சியோக் கெங்’கின் உதவியாளராகப் பணியாற்றியதைக் கண்டறிந்த பின்னர், சான் ஃபுக் சிங் எனப்படும் மற்றொரு நபரின் உறுப்பியமும் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

மசீச-வில் உறுப்பினராக அவர் சேர்ந்துள்ளார் என்ற குற்றச்சாட்டில், லியோங்கின் உறுப்பியம் ஜனவரி 19-ம் தேதி நீக்கப்பட்டது.

கட்சித் தலைமையின் அனுமதியின்றி, கட்சி உறுப்பினர்கள் யாரும் தேசியக் கூட்டணி (பி.என்.) வழங்கும் பதவிகளை ஏற்க அனுமதிக்கப்படவில்லை என்று டிஏபி ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவர் சோங் சியென் ஜென் ஓர் அறிக்கையில் கூறினார்.

“பி.என். வழங்கும் பதவிகள் அல்லது தனிப்பட்ட நன்மைகளுக்காக, கட்சி ஒருமைப்பாட்டையும் சுயமரியாதையையும் தியாகம் செய்யாதீர்கள்.

“இது கட்சிக்கு இழைக்கும் துரோகம் மட்டுமல்ல, மக்களையும் ஏமாற்றும் செயலாகும்,” என்று அவர் கூறினார்.

கடந்த ஆண்டு, மாநிலத்தில் பி.எச். அரசாங்கம் விழுந்ததில் இருந்து, கட்சியை விட்டு வெளியேறிய மூன்று டிஏபி சட்டமன்ற உறுப்பினர்களில் லியோங்-உம் ஒருவர்.