அஸிஸ் : 1969 அல்லது 2021, நாடாளுமன்ற இடைநிறுத்தம் நல்ல யோசனையல்ல

1969-ல், இனப் பதட்டங்கள் காரணமாக நாடாளுமன்றத்தை இரண்டு ஆண்டுகள் இடைநீக்கம் செய்தது அப்போது நல்ல யோசனையல்ல; எனவே, இப்போது அதை மீண்டும் செய்யக்கூடாது என்று அரசியலமைப்பு வல்லுநர்கள் தெரிவித்தனர்.

பேராக்கில், இப்போது எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும், முன்னாள் அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழக விரிவுரையாளர் அப்துல் அஸிஸ் பாரி, சுமார் 52 ஆண்டுகளுக்கு முன்பு அவசரநிலையை அமல்படுத்தியதில், இன்னும் பல பதிலளிக்கப்படாத கேள்விகள் உள்ளன என்றார்.

“இப்போது வரை, அந்தச் சம்பவம் இன்னும் மர்மமாகவே உள்ளது.

“50 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததால், அது தொடர்பான அனைத்து ஆவணங்களின் நிலையையும் அரசாங்கம் மாற்ற வேண்டும்,” என்று அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

பேராக் டிஏபி துணைத் தலைவரான அப்துல் அஜீஸ், பிரதமர் துறை அமைச்சர் தக்கியுடின் ஹசான் நேற்று வெளியிட்ட அறிக்கை குறித்து இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

தக்கியுடின் கருத்துப்படி, 1969 முதல் இரண்டு ஆண்டுகள் நீடித்த அவசரகாலத்தின் போது, ​​எந்த நாடாளுமன்றக் கூட்டமும் நடத்தப்படவில்லை, ஆனால் அரசாங்க நிர்வாகம் எந்தப் பிரச்சினையையும் எதிர்கொள்ளவில்லை.

இப்போது, வரவுசெலவுத் திட்டத்தை அங்கீகரிப்பதற்காக நாடாளுமன்றம் சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு கூடியது, அது ஒரு பிரச்சினையாக கருதப்படவில்லை என்று அந்தப் ​​பாஸ் பொதுச்செயலாளர் கூறினார்.

நாடு அவசரகால நிலையில் இருந்த காலப்பகுதியில், மலேசியாவைத் தேசிய இயக்க மன்றம் (Majlis Gerakan Negara – மாகேரன்) நிர்வகித்தது.

தெளிவுபடுத்தப்பட வேண்டியப் பிரச்சினைகளில், 1969-ஆம் ஆண்டில் அவசரகால நிலையை அறிவிக்க, யாங் டி-பெர்த்துவான் அகோங்கிற்கு அறிவுறுத்தியவர் யார் – அப்போதையப் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா – அல்லது அவரது துணை – அப்துல் ரசாக் ஹுசேன் – மற்றும் அது தேவைப்பட்டதற்கான காரணங்கள் என்ன என்று அப்துல் அஜீஸ் சொன்னார்.

“மே 13-க்கு முன்னும் பின்னும், துங்கு தனது நினைவுக் குறிப்பில் முழு விஷயத்தையும் விமர்சித்தார்.

சுருக்கமாக, 1969 இல் அவசரநிலையை நம்பியிருந்தது ஒரு நல்ல நடவடிக்கையாக இருந்திருக்காது.

“1969-இல் நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்தாமல் போனது ஒரு மோசமான முடிவு, இப்போது அதனைப் பின்பற்றக்கூடாது,” என்று அவர் கூறினார்.