ஜாஹிட் : ஏபியு, செமாங்காட் 46 தோல்விகளைப் பாஸ் சிந்தித்து பார்க்க வேண்டும்

முவாஃபாகத் நேஷனலில் (எம்.என்.) பாஸ் உடனான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் அம்னோ தீவிரமாக உள்ளது என்று, 2020 அம்னோ மாநாட்டுக்குப் பிறகு அக்கூட்டணியின் நிலை குறித்து அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி கருத்து தெரிவித்தார்.

“எனவே, முவாஃபாகத் நேஷனலில் உள்ள அம்னோவின் அரசியல் பங்காளிகள் முவாஃபாக்கட் நேஷனலின் அசல் கொள்கைகளைப் பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தைப் பற்றி தெளிவாக சிந்திப்பார்கள் என்று நம்புகிறேன்.

அங்காத்தான் பெர்பாடுவான் உம்மா (ஏபியு) மற்றும் செமாங்காட் 46 கதைகளிலிருந்து கற்றுக் கொள்ளுங்கள், அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தன, ஏனெனில் அந்த அரசியல் கூட்டணிகள் நேர்மையற்றதாகவும் உண்மையற்றதாகவும் உருவாக்கப்பட்டது,” என்று அவர் சமூக ஊடகப் பதிவு ஒன்றில் தெரிவித்தார்.

அதேப் பதிவில், அஹ்மத் ஜாஹித், ஏப்ரல் 5, 2019 தேதியிட்ட செய்தி அறிக்கையின் இணைப்பையும் சேர்த்துள்ளார், பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான்’னை மேற்கோள் காட்டி, பாஸ் மற்றும் அம்னோ இடையே ஒருமித்த கருத்து ஏற்பட வாய்ப்புண்டானால் 132 நாடாளுமன்ற இடங்களை வெல்ல முடியும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1990 பொதுத் தேர்தலுக்கு (ஜி.இ.) முன்னதாக, ஏபியு ஒப்பந்தத்தில் பாஸ், அம்னோவிலிருந்து விலகிய செமாங்காட் 46, பெர்ஜாசா, ஹமீம் மற்றும் மலேசிய இந்திய முஸ்லீம் காங்கிரஸ் (கிம்மா) ஆகியவை இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

1995-ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னர், கிம்மா அக்கூட்டணியில் இருந்து வெளியேறியது. ஜிஇ10-க்குப் பிறகு ஏபியு அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்டது.

இதற்கிடையில், செப்டம்பர் 14, 2019 அன்று, தேசிய ஒருமித்த சாசனம் (முவாஃபாகட் நேஷனல்) கையெழுத்திடப்பட்டதிலிருந்து, பாஸ் மற்றும் அம்னோ பல்வேறு வெற்றிகளைப் பெற்றுள்ளதாக ஜாஹிட் தெரிவித்தார்.

“பல இடைத்தேர்தல்களை (பிஆர்கே) வென்றது மற்றும் மக்களின் நலன்களுக்காக ஒன்றாகப் போராடுவது அதில் அடங்கும்,” என்று அவர் கூறினார்.

அப்படியிருந்தும், “உண்மையான தேசிய ஒருமித்த கருத்து” என்ற பிரச்சினையை ஜாஹிட் எழுப்பினார், மக்களின் நம்பிக்கையைப் பெற்ற அது, இப்போது அதன் எண்ணத்திலிருந்து மாறிவிட்டது.

“அவர்கள் (மக்கள்) அந்தத் தேசிய ஒருமித்த கருத்தை நம்புகிறார்கள், இதனை அல்ல.

தேசியக் கூட்டணி அரசாங்கத்தை உருவாக்கிய ஷெராட்டன் நடவடிக்கையைத் தொடர்ந்து, தேசிய அரங்கில் பாஸ்-இன் அரசியல் வளர்ச்சியை அந்த பாகான் டத்தோ எம்.பி. குறிப்பிடுவதாக நம்பப்படுகிறது.

பின்னர் தேசியக் கூட்டணியில் இணைந்த பாஸ், எம்.என். உடனான தனது உறவையும் பேணுவது இதற்குக் காரணம்.

அம்னோ 2020 மாநாட்டில், ஜிஇ15 தொடங்கியவுடன் பெர்சத்துவுடனான ஒத்துழைப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தனது நிலைப்பாட்டை அம்னோ மீண்டும் உறுதிப்படுத்தியது.

அண்மையில், பெர்சத்து மற்றும் பாஸ் ஒரு கூட்டு அறிக்கையில், 15-வது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள தேசியக் கூட்டணியில் தொடர்ந்து ஒத்துழைப்பை வலுப்படுத்துவோம் என்று வலியுறுத்தினர்.