பெர்லிஸ் அம்னோ தலைவர் பதவியிலிருந்து ஷாஹிடான் நீக்கம்

பெர்லிஸ் அம்னோ தொடர்புத் தலைவர் பதவியில் இருந்து ஷாஹிடான் காசிமை ஜாஹிட் நீக்கினார்.

அந்தப் பதவியை இனி, பெர்லிஸ் மந்திரி பெசார் அஸ்லான் மான் வகிப்பார் என அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி அறிவித்தார்.

“இந்த மாற்றம் உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. ஷாஹிடான் காசிம் தனது பதவிக்காலம் முழுவதும் செய்த சேவைக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்,” என்று ஜாஹிட் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பெர்லிஸ் அம்னோ தலைவரை மாற்றுவதற்கான அம்னோவின் முடிவு, கட்சியின் தலைமையை ஷாஹிடான் விமர்சித்ததன் காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

பெர்சத்துவுடனான ஒத்துழைப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அம்னோவின் முடிவை உரக்க எதிர்த்தவர்களில் ஷாஹிடானும் ஒருவர்.

உண்மையில், கடந்த மார்ச் மாதம், 2020 அம்னோ பொதுக் கூட்டத்தில், தனது நிலைப்பாடு குறித்து பேசியபோது பிரதிநிதிகளால் அவர் உதாசீனப்படுத்தப்பட்டார்.

ஏப்ரல் 10-ம் தேதி, பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிமுடன் இணைத்த ஆடியோ பதிவு குறித்து அஹ்மத் ஜாஹித்தை விளக்கம் அளிக்குமாறு ஷாஹிடான் வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அன்வர் அந்த ஆடியோ கிளிப்பை ஏற்றுக்கொள்வதாகத் தோன்றிய பிறகு அவர் இதனைச் சொன்னார்.

ஷாஹிடான் கூறுகையில், ஜாஹித் ஒரு விளக்கம் அளிக்க வேண்டும், ஆடியோ கிளிப் உண்மையானது என்பது நிரூபிக்கப்பட்டால், அவர் அம்னோவின் ஒழுங்கு நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும்.

முன்னதாக, அன்வர் மற்றும் ஜாஹித் இருவரும் தங்கள் குரல்கள் ஒலித்த ஆடியோ கிளிப்பை மறுத்து, இந்த விவகாரத்தில் போலீஸ் புகார் அளிப்பதாகக் கூறினர்.

இருப்பினும், அம்னோ தலைவருடன் தொடர்பு கொண்டதாகக் கூறப்படும் அந்த ஆடியோ பதிவு உண்மையானது என்றால், அதில் ஏதேனும் குற்றம் உள்ளதா என்று அன்வர் பிறகு கேள்வி எழுப்பினார்.

பாசீர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் கரீம் கூறுகையில், அஹ்மத் ஜாஹித் மற்றும் அன்வரின் ஆடியோ கிளிப்புகள் உண்மையானவை என்றால், அவர்கள் இருவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள் அல்ல, மாறாக குற்றம் செய்தத் தரப்பினரான, தொலைபேசி உரையாடலை உளவு பார்த்த நபர்தான் விசாரிக்கப்பட வேண்டியவர்.