எஸ்ஓபி குழப்பம் : மிட்டி காவல்துறைக்குக் கீச்சகம் மூலம் மனு

இன்று மீண்டும் மாவட்ட எல்லைகளைக் கடக்கும் தடைகள் தொடங்கப்பட்ட நிலையில், வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்படும் சில தொழிலாளர்கள், காவல்துறையும் சர்வதேச வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சும் (மிட்டி), அமலில் உள்ள செந்தர இயங்குதல் நடைமுறைகளுக்கு (எஸ்ஓபி) ஒத்துபோகவில்லை இணங்கவில்லை என்று புகார் கூறினர்.

சாலைத் தடுப்புகளில் இருந்த காவல்துறையினர், மிட்டியின் அனுமதி கடிதத்தைக் காட்டிய பல தொழிலாளர்களிடம், காவல்துறையினரிடமிருந்தும் ஒரு முத்திரையைப் பெற வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால் முன்னதாக, காவல்துறையின் எந்தவொரு முத்திரையும் தேவையில்லை என்று மிட்டி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மிட்டியின் அறிவிப்பு மே 7-ம் தேதி வெளியிடப்பட்டது, ஆனால் சில போலிஸ் அதிகாரிகளின் கூற்றுப்படி, அவர்கள் எந்தவொரு அறிவிப்பையும் பெறவில்லை என்றதால், மிட்டி அதனை தனது கீச்சகத்தில் பகிரங்கமாக வெளியிட முடிவு செய்தது.

“வணக்கம்… @PDRMsia @PDRMsia_Trafik தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். பணி நோக்கங்களுக்கான மிட்டி’யின் கடிதங்களுக்கு எந்தவொரு முத்திரையும் குத்த தேவையில்லை,” என்று மிட்டி கீச் செய்துள்ளது.

வேலைக்குச் செல்லும் போது, காவல்துறையினரால் ஏற்பட்ட தனது அனுபவத்தைப் பற்றி புகார் அளித்த ஒரு கீச்சகப் பயனரின் புலம்பலுக்கு இவ்வாறு பதிலளிக்கப்பட்டது.

இந்தக் கடிதத்தை மிட்டி முதலாளிகளிடம் வழங்கியுள்ளது, பின்னர் அது அவரவர் ஊழியர்களுக்கு முதலாளிகளால் வழங்கப்படும்.

“இன்று காவல்துறை, எனது நிறுவனத்திலிருந்து வெளியிடப்பட்ட ஒரு கடிதத்திற்குப் போலிஸ் முத்திரை தேவை என்று கூறியுள்ளது,” என்று அந்தக் கீச்சகப் பயனர் கூறினார்.

கீச்சகத்தில் காவல்துறையினரைத் தொடர்ந்து குறிப்பிடுவதற்கு முன்னர், பிரச்சினையைத் தெரிவித்த பயனருக்கு மிட்டி தனது பாராட்டுகளைத் தெரிவித்தது.

கோவிட் -19 நேர்வுகள் மீண்டும் உயரத்தொடங்கியதை அடுத்து, மாநில மற்றும் மாவட்ட எல்லைகளைக் கடக்கும் பயணத் தடை இன்று மீண்டும் அமல்படுத்தப்பட்டது.

இருப்பினும், சில விதிவிலக்குகள் அனுமதிக்கப்படுகின்றன, வணிக நோக்கத்திற்கு மிட்டி’யின் ஒப்புதல் கிடைத்தால் மாநிலம் அல்லது மாவட்டம் முழுவதும் பயணம் செய்வது உட்பட.