நூர் ஹிஷாம் : முழு நடமாட்டக் கட்டுப்பாடு வெற்றிகரமாக ‘பேரழிவை’ தவிர்க்கின்றது

சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவைப் பொறுத்தவரை, ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வந்த முழு நடமாட்டத் தடை, நாட்டை “பேரழிவில்” இருந்து பாதுகாத்துள்ளது.

நூர் ஹிஷாமை மேற்கோள் காட்டி ஆஸ்ட்ரோ அவானி, ஜூன் 14 அன்று நாளை ஒன்றுக்கு 13,000 நேர்வுகள் வரையில் அதிகரிக்கும் ஆபத்தை நாடு எதிர்கொண்டது என்றும் சில வாரங்கள் கழித்து தொடர்ந்து 40,000 நேர்வுகள் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் கூறியது.

இருப்பினும், நடமாட்டக் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியதால் தொற்று வளைவு வெற்றிகரமாக நேராக்கப்பட்டது என்று அவர் கூறினார்.

அதே நேரத்தில், புதிய நேர்வுகளின் புள்ளிவிவரங்களை மேலும் குறைக்க இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது என்றார் அவர்.

“சில துறைகளில் இன்னும் வெகுஜன இயக்கம் மற்றும் செயல்பாடு இருக்கும் வரையில், இன்று நாம் இருக்கும் இடத்திலேயே இருப்போம்.

“மற்றவர்கள் பிடிவாதமாக இருந்தால், சுய இயக்க கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பதன் மூலமும், நம்மையும் நம் குடும்பங்களையும் காப்பாற்றுவதன் மூலமும் நாமே மாற்றத்தைக் கொண்டு வர முடியும்,” என்று அவர் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டது.

முழு இயக்க கட்டுப்பாடுகள் பெரும்பாலான பொருளாதார, சமூக மற்றும் கல்வி நடவடிக்கைகளைத் தடைசெய்துள்ளது.

இன்னும் இரண்டு நாட்களில் காலாவதியாகத் திட்டமிடப்பட்டுள்ள முழுக் கட்டுப்பாட்டு ஆணை, கடந்த ஏழு வாரங்களுக்கான சராசரி தினசரி புதிய நேர்வுகள் இன்னும் 5,000-க்கும் மேல் இருப்பதால், மேலும் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூன் 15-ம் தேதி, பிரதமர் முஹைதீன் யாசின் தேசிய மீட்பு திட்டத்தை அறிவித்தார், இது நான்கு கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு கட்டத்திலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

இரண்டாவது கட்டம், ஜூலை மாதத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, சராசரியாக தினசரி நேர்வுகளின் எண்ணிக்கை 4,000-க்கும் குறைவாக இருந்தால் இன்னும் பல பொருளாதாரத் துறைகள் செயல்பட அனுமதிக்கப்படும்.

இதற்கிடையில், நாடு இப்போது ஒரு புதிய, மிகவும் ஆபத்தான கோவிட் -19  வேரியண்ட்`களான பீட்டா மற்றும் டெல்டா வகைகளின் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது என்பதையும் நூர் ஹிஷாம் நினைவுபடுத்தினார்.

“நாம் இப்போது ஒரு போரில் இருக்கிறோம், நாட்டைக் காப்பாற்றுவதே நமது முன்னுரிமை. இல்லையெனில், நமது தலைவிதி இந்தியாவைப் போலவே இருக்கும்,” என்று அவர் மேலும் கூறினார்.