டாக்டர் ஆதாம் : முழுமையான தடுப்பூசி பெற்றவர்களுக்கு எஸ்.ஓ.பி.க்கள் தளர்த்தப்படும்

இரண்டு மருந்தளவுகள் கோவிட் -19 தடுப்பூசியைப் பெற்று முடித்தவர்களுக்கு வழங்கப்படும் குறிப்பிட்ட நெகிழ்வுத்தன்மை விரைவில் அறிவிக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபா தெரிவித்தார்.

“இந்த அறிவிப்பு விரைவில் வரும்,” என்று அவர், இரண்டு மருந்தளவிலான தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்ற நபர்களுக்குக் கடைகளில் சாப்பிட அனுமதி மற்றும் மாவட்ட அல்லது மாநில எல்லைகளைக் கடப்பது போன்றவற்றுக்குச் சில நெகிழ்வுத்தன்மை கொடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாக, நேற்று பிரதமர் முஹைதீன் யாசின் அளித்த அறிக்கையைத் தொடர்ந்து சொன்னார்.

கோவிட் -19 தடுப்பூசி இரண்டு மருந்தளவுகளைப் பூர்த்தி செய்த நபர்களுக்கு, நெகிழ்வுத்தன்மையை வழங்குவதற்காக, செந்தர இயங்குதல் நடைமுறைகளை (எஸ்ஓபி) மறு மதிப்பீடு செய்ய, கோவிட் -19 தடுப்பூசி வழங்கல் சிறப்புக் குழுவிடம் (ஜே.கே.ஜே.ஏ.வி.) கேட்டுக் கொண்டதாக முஹைடின் கூறினார்.

நேற்று, பிக் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுதீனுடன், தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் (பிக்) வளர்ச்சி குறித்த செய்தியாளர் கூட்டத்தில், டாக்டர் ஆதாம் கூறுகையில், மொத்தம் 172 கர்ப்பிணி சுகாதார ஊழியர்கள் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், பெரும்பாலானவர்கள் 1 மற்றும் 2-ஆம் வகை பாதிப்பில் உள்ளனர்.

அவரைப் பொறுத்தவரை, 51 பேர் வகை 1, 117 வகை 2 மற்றும் மீதமுள்ளவர்கள் 5-வது வகையில் உள்ளனர்.

கோவிட் -19 வகை 1 நோயாளிகள் அறிகுறியில்லாமல் இருக்கின்றனர்; வகை (இலேசான அறிகுறிகள்), வகை 3 (நிமோனியா நோயாளிகள்), வகை 4 (உயிர்வளி தேவைப்படும் நோயாளிகள்) மற்றும் வகை 5 சுவாச உதவி தேவைப்படும் நோயாளிகள் ஆவர்.

இதற்கிடையில், ஜூலை 4 முதல் 10 வரையிலான காலகட்டத்தில், நாடு முழுவதும் மொத்தம் 870 செயலில் உள்ள திரளைகள் கண்டறியப்பட்டதாகவும், தொற்று மதிப்பு (Rt) விகிதம் 1.13 என்றும் டாக்டர் ஆதாம் கூறினார்.

“வாரத்தில் அதிகரிப்பு பதிவு செய்த திரளைகள் பணியிடங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தடுப்பு மையத் திரளைகள் ஆகும்,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்புத் திட்டத்தில், தொடக்கத்திலிருந்து கொடுக்கப்பட்ட ஒவ்வொரு 1,000 மருந்தளவு தடுப்பூசிகளுக்கும் மைசெஜாத்தெரா விண்ணப்பத்தின் மூலம், நோய்த்தடுப்புக்குப் (AEFI) பிறகு, பக்க விளைவுகள் குறித்து மொத்தம் 19.0 சுய பதில்கள் கிடைத்ததாக அவர் கூறினார்.

தெரிவிக்கப்பட்ட பக்க விளைவுகளில் ஊசி போட்ட இடத்தில் வலி, தலைவலி மற்றும் சோர்வு ஆகியவை அடங்கும்.

தேசிய மருந்து ஒழுங்குமுறை பிரிவின் நோய்த்தடுப்பு கண்காணிப்பு முறையின் அடிப்படையில், ஒவ்வொரு 1,000 மருந்தளவு தடுப்பூசிகளுக்கும், தொடர் தீவிரச் சிகிச்சை என வகைப்படுத்தப்பட்ட 0.06 அறிக்கைகள் மட்டுமே பெறப்பட்டன.

  • பெர்னாமா