தக்கியுடின், இட்ரூஸ் மீது குற்றம் சாட்டப்பட வேண்டும் – எம்.பி.

மக்களவையைத் தவறாக வழிநடத்தியதாகக் கூறி, பிரதமர் துறை அமைச்சரான தக்கியுடின் ஹசான் மற்றும் வழக்கறிஞர் இட்ருஸ் ஹருண் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம் குலசேகரன் ஒரு பிரேரணையை அனுப்பினார்.

மக்களவை செயலாளருக்கு அனுப்பிய, இன்றையத் தேதியிட்ட அக்கடிதத்தின்படி, ஜூலை 26, 27 மற்றும் 28 ஆகியத் தேதிகளில் நாடாளுமன்றத்தில் தக்கியுடினின் உரையைக் – மாமன்னருக்கு எதிரான கிளர்ச்சி – குலசேகரன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலைப்பாடு 26 (1) (p) மற்றும் 36 (12) ஆகியக் கட்டளைகளின் படி எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

அவசரகால ஆணை நீக்கப்பட்டது எனும் கோத்தா பாரு எம்.பி.யின் (தக்கியுடின்) அறிக்கை தவறானது, மேலும் அது அவையைக் குழப்பத்திற்குள்ளாக்கியது.

“உண்மை என்னவென்றால், அகோங் ஒப்புதல் அளித்தால்தான் இரத்து செய்யப்பட முடியும்,” என்று அவர் கூறினார்.

நேற்று, தேசியக் கூட்டணி அரசாங்கத்தால் அவசரகாலச் சட்டம் இரத்து செய்யப்பட்ட விதம் குறித்து மாமன்னர் ஆழ்ந்த வருத்தம் அடைந்ததாக அரண்மனை ஓர் அறிக்கையில் கூறியது.

ஜூலை 21 முதல், அவசரகாலச் சட்டம் இரத்து செய்யப்பட்டதாக, ஜூலை 26-ஆம் தேதி, தக்கியுடின் அறிவித்து மக்களவையை அதிர்ச்சிக்குள்ளாக்கியது, பலரின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியது.

நேற்று, அரண்மனை மாமன்னர் இரத்து செய்ய ஒப்புதல் அளிக்கவில்லை என்று அறிவித்தது, எனவே தக்கியுட்டின் தனது இந்த அறிவிப்பால் மக்களவையைக் குழப்பிவிட்டார்.

அரசாங்கம் – அரண்மனையின் அறிக்கைக்குப் பதிலளிக்கும் போது – இரத்து செய்வது குறித்து அமைச்சரவை அகோங்கிற்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், அரசியலமைப்பின் படி, மாமன்னர் ஆலோசனையை ஏற்க வேண்டும் என்றும் தெரிவித்தது.

கூட்டாட்சி அரசியலமைப்பின், பிரிவு 145 (2)-இன் அடிப்படையில், மாமன்னர் மற்றும் அமைச்சரவைக்கு ஆலோசனை வழங்குவது சட்டத்துறைத் தலைவரின் கடமையாகும், ஆனால் இப்போது நடப்பது இட்ருஸ் இந்தப் பிரச்சினையில் தனது கடமைகளைச் செய்யத் தவறியதைக் காட்டுகிறது என்று குலசேகரன் சொன்னார்.

அதே நேரத்தில், குலசேகரன் இந்த விஷயத்தை நாடாளுமன்ற நடைமுறைகளை அமல்படுத்துவது தொடர்பான கூட்டாட்சி அரசியலமைப்பின் பிரிவு 62 (1)-இன் கீழ் செய்யப்பட்ட ஒரு நிலை உத்தரவைக் குறிப்பிட்டார்; “இந்த அரசியலமைப்பின் விதிகள் மற்றும் கூட்டாட்சி சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு, ஒவ்வொரு நாடாளுமன்றமும் அதன் சொந்த நடைமுறைகளை ஒழுங்குபடுத்தும்.”

“இந்த மோதல் ஏற்படும் போது சட்டத்துறைத் தலைவர் ஆரம்பத்திலேயே அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.

“மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, சட்டத்துறைத் தலைவர் மன்னரின் ஆலோசனையை நிறைவேற்றத் தவறிவிட்டார் என்பது தெளிவாகிறது,” என்று அவர் கூறினார்.

முன்னாள் மனிதவள அமைச்சருமான அவர், தக்கியுடின், இட்ருஸ் இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தக்கியுடின் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.