பாஸ், அம்னோ, பெர்சத்து – தனி தனியாகப் சிறப்பு கூட்டத்தை நடத்தின

நாட்டின் அரசியல் முன்னேற்றங்களைத் தொடர்ந்து, பல அரசியல் கட்சிகள் இன்று சிறப்பு கூட்டங்களை நடத்தின.

மலேசியாகினி தொடர்பு கொண்டபோது, பாசீர் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினர், அஹ்மத் ஃபட்லி ஷாரி, ​​பாஸ் தங்கள் மக்கள் பிரதிநிதிகளுடன் ஒரு சிறப்பு கூட்டத்தை நடத்தியதை உறுதிப்படுத்தினார்.

“ஆமாம், ஒரு சிறப்பு கூட்டம் நடந்தது,” என்று அவர் சுருக்கமாக கூறினார்.

அதேக் கட்சியைச் சேர்ந்த தும்பாட் நாடாளுமன்ற உறுப்பினர், சே அப்துல்லா மாட் நாவியும் இதை உறுதிப்படுத்தினார். இருப்பினும், சுயத் தனிமைப்படுத்தலில் இருந்ததால் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை என்றார்.

இதற்கிடையில், அம்னோ அரசியல் பணியகம், இன்று பிற்பகல் புத்ரா உலக வாணிக மையத்தில், கட்சியின் எதிர்காலம் குறித்து விவாதிக்க ஒரு கூட்டத்தை நடத்தியது.

அதைப் போலவே, பெர்சத்து கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் வான் சைஃபுல் வான் ஜான், கட்சியின் உயர்மட்டத் தலைமை மன்றமும், இன்று பிற்பகல் இயங்கலையில் கூட்டம் நடத்தியதாகத் தெரிவித்தார்.

“பெர்சத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இயங்கலையில் கூட்டம் நடத்தியது. பெர்சத்து உறுப்பினர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்றும், தலைமை மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

“முடிவு கிடைத்தவுடன், துணைத் தலைவர் ஓர் அறிவிப்பை வெளியிடுவார் என்று நான் எதிர்பார்க்கிறேன்,” என்று அவர் ஓர் ஊடக அறிக்கையில் கூறினார்.