அன்வர் அனைத்து எதிர்க்கட்சிகளையும் விரைவில் சந்திப்பார்

பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) அனைத்து எதிர்க்கட்சிகளையும், ஒரு “திறமையான எதிர்க்கட்சியாக” மாற்றுவதற்கான கட்சியின் ‘பெரிய கூடாரம்’ கருத்துக்கு ஏற்ப, அவர்களுடன் சேரந்து வேலை செய்ய அழைப்பு விடுக்கவுள்ளது.

பி.எச். தலைமை மன்றம் தீர்மானித்தபடி, தலைவர் அன்வர் இப்ராகிம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கிடையேயான சந்திப்பில் இந்த அழைப்பு வழங்கப்படும்.

“விரைவில், எதிர்க்கட்சி தலைவர் அனைத்து எதிர்க்கட்சிகளின் முக்கியத் தலைவர்களுடனான சந்திப்பை நடத்தவுள்ளார், இதில் பி.எச்.-உடன் இணைய அல்லது பணியாற்ற அழைப்பு விடுக்கப்படும்.

அக்கூட்டத்தில், தற்போதைய அரசியல் பிரச்சினைகள் மற்றும் செப்டம்பர் 6-ஆம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிப்பார்கள் என்று பிஎச் கூறியுள்ளது.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதிக்க மற்றும் அஸ்லினா ஓத்மான் சையத் இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து மக்களவை துணை சபாநாயகர் காலியிடத்தை நிரப்புவதற்கு ஒரு சிறப்பு அமர்வை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளும் இதில் அடங்கும்.

தேசியப் புனர்வாழ்வு மன்றம் மற்றும் கோவிட் -19 தொற்றைச் சமாளிக்கும் சிறப்பு குழுவில் சேர்வதற்கான பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப்பின் அழைப்பையும் பி.எச். பரிசீலிக்கும்.