மலாக்கா பிஆர்என் : பிஎன் சின்னத்தைத் தேர்ந்தெடுக்கும் பாஸ்-இன் முடிவை அம்னோ மதிக்கிறது

மலாக்கா மாநிலத் தேர்தலில் (பிஆர்என்), தேசியக் கூட்டணி (பிஎன்) சின்னத்தைத் தேர்வு செய்யும் பாஸ் கட்சியின் முடிவை அம்னோ மதிக்கிறது.

“பாஸ் அப்படி முடிவு செய்திருந்தால், அம்னோவில் உள்ள நாங்கள் அதை மதிக்கிறோம்,” என்று அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் கூறியதாக தி ஸ்டார் அறிக்கையில் மேற்கோள் காட்டியுள்ளது.

நவம்பர் 20 அன்று, மலாக்கா பிஆர்என்-இன் அம்னோ தேர்தல் இயக்குநராகவும் முகமட் உள்ளார்.

சமீபத்திய இந்த முடிவால், பாஸ் உடனான அம்னோவின் முவாஃபகாட் நேஷனல் ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் இல்லை, அது அப்படியே இருக்கும் என்றும் முகமட் மேற்கோள் காட்டினார்.

ஆரம்பத்தில், பாஸ் பிஎன் -ஐ விட்டு வெளியேறி அதனுடன் தேர்தல் உடன்படிக்கைக்கு பக்கபலமாக இருக்கும் என்று அம்னோ நம்பியது.

தேசிய முன்னணி தலைவர், பெர்சத்து தலைமையிலான தேசியக் கூட்டணியுடன் இணைந்து பணியாற்றுவதற்கு எதிரான தனது நிலைப்பாட்டைத் தெளிவாகக் கூறியுள்ளார்.

இந்த முறை, பிஎன் -உடன் சாய்ந்தாலும், நேற்று, ஒரு மூத்தப் பாஸ் தலைவர் தங்கள் கட்சி அம்னோ மற்றும் பெர்சத்துவுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வழிகளை பரிந்துரைத்தார்.

அம்னோ உறவுகளைத் துண்டிக்காது

மலாக்கா அம்னோ துணைத் தலைவரான முகமட் அலி முகமட்டும், இந்த முடிவுக்காகப் பாஸ் -உடனான உறவை அம்னோ முறித்துக் கொள்ளாது என்றார்.

“பாஸ் உடனான உறவுகளை அம்னோ துண்டிக்காது.

“அது ஏன் இந்த நடவடிக்கையை (பிஎன் சின்னத்தைப் பயன்படுத்த) எடுக்க முடிவு செய்தது என்று எங்களுக்குத் தெரியவில்லை, ஆனால் அனைத்து பாஸ் உறுப்பினர்களும், இந்த நாட்டில், முஸ்லிம்களின், குறிப்பாக மலாய்க்காரர்களின் நல்வாழ்வை உறுதி செய்வதில் பாஸ் மற்றும் அம்னோ இடையே ஒரு நல்ல தீர்வைக் கண்டுபிடிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் கூறினார் என்று அரசாங்கத்திற்குச் சொந்தமான செய்தி நிறுவனம், பெர்னாமாவால் மேற்கோள் காட்டப்பட்டது.

முகமது அலி செனட்டராகவும், செனட்டின் துணைத் தலைவராகவும் உள்ளார்.

வேட்பாளர் வேட்புமனு தாக்கல் வரும் திங்கட்கிழமை, நவம்பர் 8-ல் நடைபெறவுள்ளது.