சமூகப் போராளி ஹிண்ட்ராப் கணேசன் காலமானார்

ஹிண்ட்ராப் (2007) போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு இந்தியச் சமூகத்தின் சிக்கலைத் தீர்ப்பதற்கு வழிமுறைகளை முன்வைத்த அந்த இயக்கத்தில்  ஆலோசகர் கணேசன் நாராயணன் தனது 71-வது வயதில், கடந்த 11ஆம் தேதி நோய்வாய்ப்பட்டுக் காலமானார். அவரின் இறுதி அஞ்சலியில் அவரின் வேண்டுகோளுக்கு இணங்க “Freedom” என்ற அவரின் அமைப்பின் கொடி சார்த்தப்பட்டது.

அவரின் ஈடுபாட்டின் போது அரசியல் சமூக பொருளாதார சிந்தனையை ஒரு ஆழமான வகையில் சீராய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதன் வழி அரசாங்கம் இந்நாட்டில் ஏழ்மையில் சிக்கியுள்ள இந்தியச் சமூகத்துக்கு எவ்வகையான திட்டங்களைக் கொள்கையின் மூலம் அமலாக்கம் செய்ய இயலும் என்பதற்கான திட்டங்களை வகுத்தவர் கணேசன்.

அவரின் ஈடுபாட்டின் வழி முன்மாதிரியான சமூக பொருளாதார திட்டங்களை அரசிடம் கோரப் போராட்டங்கள்  அரசியல் நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்டன.

சமூக போராட்டங்கள் வறுமையான மக்கள் சார்ந்த இயக்கமாக மட்டும் இல்லாமல் அது ஒரு சமூகப்பார்வையில் ஒடுக்கப்பட்ட இன அடிப்படையிலும், அதைக் கையாள அரசு இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டை ஒரு அரசியல் தீர்வாகக்  கொள்கை அளவில் வைக்க வேண்டும் என்பதை முன்னெடுத்தவர்.

ஹிண்ட்றாப்பில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அவர் தனது ஈடுபாட்டைத் தனிமை ஆக்கிக் கொண்டு தன்னால் இயன்ற செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக உடல் நலம் குறைவாக இருந்த கணேசன் தொடர்ச்சியாகத் தனது ஈடுபாட்டை எழுத்து வடிவத்திலும் மக்களுடன் கலந்து உரையாடுவதிலும் காட்டினார்.

அவரின் ஆழமான அரசியல் சிந்தனையும் முன்னெடுப்போம் இந்தியச்  சமூகத்திற்கு என்றுமே ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

அவரின் மறைவு நாட்டில் உள்ள சமூக போராளிகளுக்கு ஒரு பெரும் இழப்பாகும் என்பதில் சற்றும் ஐயமில்லை.

அவரின் ஆத்மா சாந்தி அடைய மலேசியா இன்று-வின் நிர்வாகத்தினர்  தங்களின் அனுதாபத்தை அன்னாரின் குடும்பத்தினர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றனர்.