டாக்டர் மகாதீர், தமது கண்காணிப்பில் உலக வங்கிக் கடன்கள் பெறப்பட்டதை ஒப்புக் கொள்கிறார்

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், தமது நிர்வாகம் உலக வங்கியிடமிருந்து கடன்களை வாங்கியதை ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் பணம் கோரி தாம் அந்த உலக நிதி அமைப்புக்குக் கடிதம் எழுதவில்லை என வலியுறுத்தினார்.

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறிக் கொண்ட விஷயங்களுக்குத் தமது வலைப்பதிவு மூலம் பதில் அளித்த மகாதீர், உலக வங்கிக்குத் தாம் கடிதம் வழியாகவோ அல்லது வாய்மொழியாகவோ வேண்டுகோள் விடுக்கவில்லை என்றார்.

“அன்வார் நான் அதனைச் செய்ததற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும். அவர் அவ்வாறு செய்யத் தவறினால் தாம் சொல்வது உண்மையென பள்ளிவாசலில் திருக்குர் ஆன் மீது சத்தியம் செய்ய வேண்டும்,” என்றார் அவர்.

1998ம் ஆண்டு அன்வார் நீக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்ட பின்னர் நிதி அமைச்சர் பொறுப்பையும் ஏற்றுக் கொண்ட மகாதீர், உலக வங்கி அல்லது அனைத்துலகப் பண நிறுவனத்திடமிருந்து கடன்களைப் பெறுவது, ‘உதவி என அழைக்கப்படும் அவை நிலைமையை மோசமாக்கி விடும்’ எனக் கருதி அவற்றை மலேசியா நிராகரித்ததாகச் சொன்னார்.

அன்வார் அனைத்துலக பண நிறுவன கொள்கைகளுக்கு ஆதரவு அளித்தார். பாங்க் நெகாரா கூட அவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தது என்றார் அந்த முன்னாள் பிரதமர்.

“அன்வார் வட்டி விகிதங்களை உயர்த்தினார். வராத கடன்கள் என அறிவிப்பதற்கான காலக் கெடுவை ஆறு மாதங்களிலிருந்து மூன்று மாதங்களாகக் குறைத்தார். வரவு செலவு உபரியைப் பெறுவதற்காக அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகளைக் குறைத்தார்.”

“அவர் நாணயக் கட்டுப்பாடுகளை எதிர்க்கவில்லை என்றாலும் அவர் நியமனம் செய்த பாங்க் நெகாரா கவர்னரும் துணை கவர்னரும் அவற்றை அமலாக்க மறுத்து பதவி விலகிக் கொண்டனர்,” என மகாதீர் நினைவு கூர்ந்தார்.

உலக வங்கியிடமிருந்து 1958ம் ஆண்டு தொடக்கம் மலேசியா கடன்களைப் பெற்று வந்ததாக அவர் சொன்னார். 1998ம் ஆண்டு வாக்கில் அதனிடமிருந்து கடன்களைப் பெறுவதை மலேசியா நிறுத்திக் கொண்டது.

கல்வித் துறை,சமூகத் துறை, தொழில் நுட்பத் துறைக் கடன்களுக்கான பேச்சுக்கள் கடைசியாக 1997ம் ஆண்டு நடத்தப்பட்டது.

“அந்தக் கடன்கள் நிதி நெருக்கடி முடிந்த 1999ம் ஆண்டு வரையில் அங்கீகரிக்கப்படவில்லை. பேச்சுக்களைத் தொடர்ந்து தான் வழக்கமாக கடன் விண்ணப்பங்கள் அனுப்பப்படும்.”

அன்வாருடைய கூற்றுக்களுக்கு ஏற்கனவே பதில் அளித்துள்ள மகாதீர்,” உலக நிதி அமைப்பிடமிருந்து கடன்களைப் பெறுவது நாட்டை அதற்கு “அடிமையாக்கி” விடும் எனக் கருதியதால் அவற்றை ஏற்றுக் கொள்ள மறுத்ததாகக் கூறினார்.

அதனைத் தொடர்ந்து அன்வார் சிறையில் இருந்த கால கட்டத்தில் அதாவது 1998ம் ஆண்டு அக்டோபர் மாதம் பொருளாதார திட்டப் பிரிவு கடன்களுக்கு ஏற்பாடுகளைச் செய்ததற்கான ஆவணங்களை பிகேஆர் காட்டியது.