PH உச்ச மன்ற கூட்டத்தில் இந்தியர்கள் பற்றிய மகாதீரின் அறிக்கை இடம் பெறவில்லை

இந்த வார பெரிக்காத்தான் நேஷனல் உச்ச மன்ற  கூட்டத்திற்கு முன்னதாக, கெராக்கான் தலைவர் டொமினிக் லாவ், இந்திய மலேசியர்களைப் பற்றி டாக்டர் மகாதீர் முகமட்டின் இனவெறிக் கருத்துக்களுக்குக் கண்டனம் தெரிவிக்க முன்மொழியப் போவதாக  கூறியிருந்தார்.

இருப்பினும், இந்த விவகாரம் எழுப்பப்பட்டதா அல்லது ஏதேனும் முடிவு எடுக்கப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

நேற்றிரவு PN பொதுச்செயலாளர் ஹம்சா ஜைனுடின் கூட்டத்தின் சுருக்கமான அறிக்கையை வெளியிட்டார். அதில்  மகாதீரைப் பற்றிய  விவாதங்கள் எதையும் குறிப்பிடவில்லை.

PN பொதுச் செயலாளர் ஹம்சா ஜைனுதீன்

மாறாக, வாழ்க்கைச் செலவுப் பிரச்சினைகள் குறித்து உச்ச கவுன்சில் விவாதித்ததாக அவர் கூறினார்.

“தண்ணீர் கட்டண உயர்வு உட்பட தற்போதைய வாழ்க்கைச் செலவு நிலைமை குறித்து உச்ச கவுன்சில் விவாதித்ததுடன், பொருளாதாரப் பிரச்சினைகளுக்கும் மக்களின் பிரச்சினைகளுக்கும் முன்னுரிமை அளிக்க மத்திய அரசை ஒருமனதாக வலியுறுத்துகிறது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

PN தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மாநாடு மற்றும் அதன் கூறு கட்சிகளை வலுப்படுத்த விரைவில் திட்டங்களையும் PN விவாதித்ததாக அவர் கூறினார்.

அதுமட்டுமல்லாமல், புதிய PN  இளைஞர் பிரிவு தலைவராக PAS இளைஞர் தலைவர் அஃப்னான் ஹமிமி தைப் அசாமுத்தனை நியமிப்பதற்கும் உச்ச கவுன்சில் ஒப்புக் கொண்டது என்றார்.

நேற்றைய கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் டொமினிக் லாவும்  ஒருவர்.