அரசுக்குச் சொந்தமாகச் சமூக ஊடக தளத்தை உருவாக்குவது மிகவும் விலை உயர்ந்தது – அமைச்சர்

மலேசியர்களுக்காகப் பிரத்யேகமாகச் சமூக ஊடக செயலியை உருவாக்குவது புத்ராஜெயாவின் முதன்மையான விஷயமாக இல்லை என்று தகவல் தொடர்பு அமைச்சர் பஹ்மி பட்சில் கூறினார்.

இதற்குக் காரணம், புதிய தளங்களை உருவாக்குவதற்கு ஆகும் செலவு மிக அதிகம்.

“அரசாங்கம் தீர்க்க வேண்டிய பல பிரச்சனைகள் உள்ளன. உதாரணமாக, பாழடைந்த பள்ளிகள் மற்றும் கிளினிக்குகள்”.

“இருப்பினும், மலேசியாவில் அத்தகைய தளங்களை உருவாக்க விரும்பும் தனியார் நிறுவனங்கள் இருந்தால், அது அவர்களைப் பொறுத்தது. அவ்வாறு செய்வதிலிருந்து நாங்கள் தடை செய்யவில்லை”.

“அவர்கள் மோஸ்டி (அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு அமைச்சகம்) அல்லது MDEC (Malaysia Digital Economy Corporation)) ஐ தொடர்பு கொள்ளலாம்,” என்று பஹ்மி (மேலே) இன்று புத்ராஜெயாவில் அமைச்சின் மாதாந்திர கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை இரவு புக்கிட் ஜலீலில் உள்ள ஆக்ஸியாட்டா அரங்கில் அரசாங்கத்தின் பாலஸ்தீன சார்பு பேரணியின்போது, ​​புத்ராஜெயா குறிப்பாக மலேசியர்களுக்காக ஒரு சமூக ஊடக பயன்பாட்டை உருவாக்கும் திட்டத்தைப் பரிசீலித்து வருவதாகப் பஹ்மி கூறினார்.

சில சமூக ஊடக பயன்பாட்டு வழங்குநர்கள் மலேசியர்களிடமிருந்து லாபம் ஈட்டுகிறார்கள், ஆனால் பயனர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவில்லை என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் நியாயப்படுத்தினார்.

“கடந்த ஆண்டு, முகநூல் மட்டும் மலேசியாவில் 600 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரிம 2.7 பில்லியன்) சம்பாதித்தது, ஆனால் மலேசியாவில் தங்கள் தளத்தின் நிலை மற்றும் பயன்பாடு பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்த அவர்கள் என்ன செய்தார்கள்?” என்று அவர் கேட்டார்.

“அவர்களுக்கு அர்ப்பணிப்பு இல்லை, எனவே நாங்கள் நிலைமையை ஆய்வு செய்து மதிப்பீடு செய்ய வேண்டும்”.

“எங்கள் சொந்த சமூக ஊடக தளத்தை உருவாக்குவது எளிதானது அல்ல, ஆனால் சில நாடுகள் முயற்சித்துள்ளன. நாங்கள் அதைக் கவனிப்போம்,” என்று அவர் மேலும் கூறினார்.