அமெரிக்க இறக்குமதி வரி விவகாரம் குறித்து வெள்ளிக்கிழமை அமைச்சரவையில் விளக்கமளிக்கப்படும் – அன்வார்

டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட இறக்குமதி வரிகளை ரத்து செய்த அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து, அடுத்த கூட்டத்தில் அமைச்சரவைக்கு விளக்கமளிக்கப்படும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். 

நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட வரிகளுக்குப் பதிலாக, அமெரிக்காவிற்குள் நுழையும் அனைத்துப் பொருட்களுக்கும் 15% உலகளாவிய இறக்குமதி வரியை விதிக்கப்போவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். முன்னதாக அவர் 10% வரியை விதிப்பதாகத் தெரிவித்திருந்தார். 

இன்று மாலை இங்கு நடைபெற்ற ‘நோன்பு திறப்பு’ நிகழ்ச்சிக்குப்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அன்வார், முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் (Miti) இதுகுறித்த விரிவான அறிக்கையை வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்கும் என்று கூறினார். 

“நாங்கள் அதனைப் பரிசீலித்த பிறகு, அதற்கான பதிலை வழங்குவோம்,” என்று அவர் கூறினார்.

நிதி அமைச்சருமான அன்வார், அமெரிக்க நீதிமன்றத்தின் தீர்ப்பை மிதி (Miti) அமைச்சு ஆய்வு செய்து வருவதாகவும், இது தொடர்பாக வாஷிங்டன் டிசி மற்றும் ஆசியான் நாடுகளிலுள்ள தங்களுக்கு இணையான துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

வாஷிங்டன் இன்னும் ஒருதலைப்பட்சமான வரிகள் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளை விதிக்கக்கூடிய பிற சட்ட வழிமுறைகளைக் கொண்டுள்ளது என்று முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் ஜொஹாரி கானி நேற்று சுட்டிக்காட்டினார்.

அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப் பிறகு, அனைத்து இறக்குமதிகளுக்கும் 10% வரி விதிக்கப்படும் என்ற டிரம்பின் ஆரம்பகட்ட அறிவிப்பைத் தனது அமைச்சகம் கவனித்து வருவதாக ஜொஹாரி கூறினார். (டிரம்ப் தற்போது அதனை 15% ஆக அதிகரித்துள்ளார்).

கடந்த ஆண்டு ஆசியான் உச்சிமாநாட்டிற்காக டிரம்ப் கோலாலம்பூருக்கு வந்திருந்தபோது, மலேசியாவும் அமெரிக்காவும் ஒரு பரஸ்பர வர்த்தக ஒப்பந்தத்தில் (reciprocal trade agreement) கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தம் மலேசியப் பொருட்களுக்கான 19% வரி விதிப்பைத் தக்கவைத்தது, இருப்பினும் சில குறிப்பிட்ட தயாரிப்புகள் ‘கூட்டு வர்த்தகப் பட்டியலின்’ கீழ் பூஜ்ஜிய வரிச் சலுகையைப் பெற்றன.

மலேசியாவின் பொருளாதார நலன்களையும் இறையாண்மையையும் பாதுகாப்பதற்காக, இந்த ஒப்பந்தம் குறித்த ஆய்வு மற்றும் அதன் நன்மை தீமைகளை மதிப்பிடும் பணியில் தற்போது மிதி (Miti) அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.

-fmt