நெகிரி செம்பிலான் மாநில அரசைக் கைப்பற்ற பெரிக்காத்தான் இலக்கு

வரவிருக்கும் மாநிலத் தேர்தலில் நெகிரி செம்பிலான் மாநில அரசைக் கைப்பற்றுவதை பெரிக்காத்தான் நேசனல் தனது இலக்காகக் கொண்டுள்ளது. ஜொகூரில் மேற்கொண்ட பிரச்சாரத்தை விட இக்கூட்டணியின் பிரச்சாரம் மிகவும் தீவிரமாக இருக்கும் என்று அதன் தகவல் பிரிவுத் தலைவர் அன்வார் மூசா கூறியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஜொகூர் தேர்தலுக்கு முன்னதாக, பாஸ் கட்சியால் தனியாக மாநில அரசை அமைக்க முடியாது என்பதை அக்கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் ஒப்புக்கொண்டார். மேலும் அவர் அம்னோவிற்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். பெரிக்காத்தான் போட்டியிடாத தொகுதிகளில் பாரிசான் நேசனல் வேட்பாளர்களை ஆதரிக்குமாறு தனது ஆதரவாளர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

நெகிரி செம்பிலானில் தங்களின் நோக்கம் அரசியல் எதிரிகளை கட்டுப்படுத்துவது மட்டுமல்ல, மாநில நிர்வாகத்தைக் கைப்பற்றுவதே ஆகும் என்று அன்வார் தெரிவித்துள்ளார்.

ஜொகூர் மாநிலத் தேர்தலில், எங்களின் உத்தி எதிரிகளை கட்டுப்படுத்துவதாக மட்டுமே இருந்தது. ஆனால், நெகிரி செம்பிலானில், மாநில நிர்வாகத்தைக் கைப்பற்றுவதே எங்கள் நோக்கம்,” என்று அவர் இன்று கோத்தா பாருவில் செய்தியாளர்களிடம் கூறினார்.

தேர்தலில் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறை குறித்து பெரிக்காத்தான் மற்றும் பாரிசான் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஒருமித்த கருத்தை எட்டியுள்ளன என்றும், இருப்பினும் இது குறித்து கட்சிகள் மேலும் விவாதங்களை நடத்தும் என்றும் அவர் கூறினார்.

என்னால் அனைத்து விவரங்களையும் வெளியிட முடியாது, ஆனால் இந்த முறை, அணுகுமுறை மிகவும் வலுவானதாகவும் ஆக்ரோஷமானதாகவும் இருக்கும்.

பாஸ் மத்திய செயற்குழு உறுப்பினரான அவர், தாங்கள் போட்டியிடும் இடங்களின் எண்ணிக்கை குறித்து விவாதிக்கவும், தேர்தலுக்கான வேட்பாளர்களை இறுதி செய்யவும் கட்சி இன்று இரவு கூடும் என்று கூறினார்.

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக, தனது கட்சி பாரிசான் கூட்டணியுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நேற்று ஹாடி கூறினார்.

பாரிசான் முன்பு தன்வசம் வைத்திருந்த 14 தொகுதிகளையும் தக்க வைத்துக் கொள்ள கொள்கை அளவில் பாஸ் ஒப்புக்கொண்டுள்ள அதே வேளையில், பாஸ் முன்பு வெற்றி பெற்ற மூன்று தொகுதிகளில் போட்டியிடும் என்றும் அவர் கூறினார்.

இருப்பினும், பாஸ் கட்சியுடன் தொகுதிப் பகிர்வு ஒப்பந்தம் எதுவுமில்லை என்றும், இரு கட்சிகளுக்கும் இடையிலான எந்தவொரு விவாதமும் ஒரு புரிதலை மட்டுமே குறிக்குமே தவிர, இறுதி ஒப்பந்தம் அல்ல என்றும் பாரிசான் தலைவர் அகமட் ஜாஹிட் ஹாமிடி பின்னர் தெரிவித்தார்.

 

 

 

-fmt