பிரதமர்: பக்காத்தான் வாக்குறுதிகள் பொருளாதாரத்தை அழித்துவிடும்

பாரிசான் நேசனல், தேர்தல் வெற்றி போன்ற குறுகியகால நன்மைக்காக நாட்டின் நீண்டகால நலன்களைப் பலியிடாது என்று பிரதமர் நஜிப்  அப்துல் ரசாக் கூறுகிறார்.

தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக பலமாதிரியும் வாக்குறுதிகள் வழங்குவது நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்கி விடும் என்றாரவர்.

மக்களின் ஆதரவு அரசாங்கத்துக்குத் தேவைதான் என்று கூறிய நஜிப், அந்த ஆதரவைப் பெறுவதற்காக அது பொறுப்பற்ற முறையில் செயல்பட்டு எதிர்த்தரப்புகள் செய்வதுபோல் பலமாதிரி வாக்குறுதிகளை அள்ளித்தெளிக்காது என்றார்.

செயல்படுத்த முடியாத வாக்குறுதிகளை நிறைவேற்ற முயன்றால்  மற்ற பல நாடுகள் எதிர்நோக்குவதுபோன்ற ஒரு நிலையைத்தான் மலேசியாவும் எதிர்நோக்க நேரிடும்.ஐரோப்பிய நாடுகள் சில எதிர்நோக்கும் பிரச்னைகளைத்தான் பிரதமர் அவ்வாறு குறிப்பிட்டார்.

“தேர்தலில் ஆதரவு பெறுவதற்காக தேசிய நலன்களைப் பலியிட மாட்டோம். நாட்டைத் திறமையாக நிர்வகிக்கிறோம்.  வலிமையைப் பெருக்கிக் கொண்டிருக்கிறோம்.இலாபத்தை மக்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கிறோம்”.கங்காருக்கு அருகில், சிம்பாங் அம்பாட் மண்டபத்தில் 1மலேசியா நிகழ்வு ஒன்றில் நஜிப் பேசினார்.

பிரதமர் பெர்லிசுக்கு ஒரு-நாள் வருகை மேற்கொண்டிருக்கிறார்.

-பெர்னாமா