“கல்வியில் வஞ்சிக்கப்படும் மலேசிய இந்தியர்கள்” – ஹிண்ட்ராப் கருத்தரங்கம்

பாலர்பள்ளி துவங்கி பல்கலைக்கழகம் வரை இனரீதியான இருவேறு கல்வி கொள்கைகளினால் மிகவும் பாதிக்கப்பட்ட  நிலையில் நம் இந்திய மாணவர்கள் கல்வியில் வஞ்சிக்கப்படுவதை நடுநிலையிலிருந்து சிந்திக்கும் எவராலும் மறுக்க இயலாது.

இக்கொள்கையின் விளைவு இன்று நம் இன மாணவர்கள் எதிநோக்கும் கல்வி பாரபட்சம்.

இந்தக் கல்வி அவலநிலையினால் நம் எதிர்கால சந்ததியினர் பலியாவது தடுக்கப்பட  வேண்டுமானால் பொதுமக்களாகிய நாம், இந்நாட்டில் எப்படியெல்லாம் கல்வியில் வஞ்சிக்கப்படுகிறோம் என்பதை முதலில் தெரிந்து புரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியமாகும்.
அந்த வகையில் சிலாங்கூர் ஹிண்ட்ராப் மக்கள் சக்தி இயக்கத்தினர் எதிர்வரும் மார்ச் 17 ஆம் தேதி, சனிக்கிழமை இரவு மணி 7 .30 க்கு  கோலாலம்பூர் சீன அசம்பிளி மண்டபத்தில் “கல்வியில் வஞ்சிக்கப்படும் மலேசிய இந்தியர்கள்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இக்கருத்தரங்கில் “Malaysian Indian Dilemma” நூலாசிரியர் ஜானகிராமன், “ஒப்பிட்டேன் ஓலமிட்டேன்” நூலாசிரியர்  திருவேங்கடம், செம்பருத்தி-மலேசியாஇன்று ஆசிரியர் குழுமத்தில் ஒருவரான ஜீவி காத்தையா,   மற்றும் ஹிண்ட்ராப் மக்கள் சக்தி தேசிய ஒருங்கிணைப்பாளர் வி.சம்புலிங்கம் ஆகியோர் உரை நிகழ்த்தவுள்ளனர்.

சமுதாய அக்கறையோடும், கல்வி சம்பந்தப்பட்ட விவகாரங்களில் இந்தியர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடும் இந்த சமுதாய ஆர்வளர்களை சிரத்தையோடு ஏற்பாட்டாளர்கள் ஒன்று திரட்டியுள்ளனர்.

எனவே சிரமம், தூரம் பாராமல், இந்த கருத்தரங்கில் பொதுமக்களும், எஸ்.பி.எம் மற்றும் எஸ்.டி.பி.எம் தேர்வு எழுதிய மாணவர்களும் கலந்து கொண்டு பயனடையுமாறு சிலாங்கூர் ஹிண்ட்ராப் ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வம் கேட்டுக்கொள்கிறார்.

மேல்விபரங்களுக்கு 016 354 5869 / 016 313 6915 என்ற  எண்களில் தொடர்புகொள்ளலாம் அல்லது www.hindraf.org  என்ற அகப்பக்கத்தை நாடலாம் என்று ஹிண்ட்ராப் தேசிய ஒருங்கிணைப்பாளர் வி.சம்புலிங்கம் அறிவித்துள்ளார்.

TAGS: