சுதேசி பாரம்பரிய உரிமை நிலம் மீதான வழக்கில் சரவாக் சுதேசிகள் தோல்வி

சுதேசி பாரம்பரிய நில உரிமையாளர்கள் சமர்பித்திருந்த முக்கியமான முறையீட்டை கூட்டரசு நீதிமன்றம் இன்று நிராகரித்தது. அந்த முடிவு அது போன்ற இன்னும் தேங்கியிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் மீது பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தி விடக் கூடும்.

பாத்தோ பாகியும் மேலும் ஐவரும் கொண்டு வந்த அந்த வழக்கை பதவி விலகிச் செல்லும் தலைமை நீதிபதி  ஸாக்கி அஸ்மி தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட குழு அந்த முறையீட்டை நிராகரிப்பது என ஏகமனதாக முடிவு செய்தது.

பாக்குன் அணைக்கட்டுத் திட்டத்துக்காக தங்களது நிலத்தை இழந்ததற்காக மாநில அரசாங்கத்தின் மீது அந்த அறுவரும் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

ஸாக்கியின் கடைசித் தீர்ப்பு இதுவாகும். அவர் வரும் திங்கட்கிழமை பதவி விலகிக் கொள்கிறார். ஓய்வு பெறும் வயதான 66ஐ எட்டியதால் அவர் விலகிக் கொள்கிறார்.

சபா, சரவாக் தலைமை நீதிபதி ரிச்சர்ட் மாஞ்சும், கூட்டரசு நீதிமன்ற நீதிபதி முகமட் ராவ்ஸ் ஷாரிப் ஆகியோர் மற்ற இருவர் ஆவர்.

அந்த வழக்குடன் இணைத்துக் கூறப்பட்ட பாத்தோ இன்றைய தீர்ப்பை செவிமடுக்க உயிருடன் இல்லை. அவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு காலமானார்.

2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சரவாக் உயர் நீதிமன்றம் அந்த ஆறு சுதேசிகளின் கோரிக்கையை நிராகரித்தது. முறையீட்டு நீதிமன்றம் உயர் நீதிமன்ற முடிவை கடந்த ஆண்டு நிலை நிறுத்தியது.

அந்த வழக்கு தொடர்பாக  முறையீடு செய்து கொள்வதற்கு இவ்வாண்டு மார்ச் மாதம் முதல் தேதி கூட்டரசு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அந்த முறையீட்டுக்கு வழங்கப்பட்ட முடிவுதான் இன்றைய தீர்ப்பு.

இதனிடையே அது போன்ற இன்னொரு வழக்கை இன்னொரு இபானான, ஜாலாங் பாரான் காகிதக் கூழ் தயாரிப்புத் தொழில் கூடத்தை அமைப்பதற்காக தமது கிராமத்து நிலத்தை எடுத்துக் கொண்டதற்காக சரவாக் மாநில அரசாங்கம் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.

நிலச் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ள சுதேசி பாரம்பரிய நிலத்தை மாநில அரசாங்கம் கையகப்படுத்தியது கூட்டரசு அரசியலமைப்பில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது என அவர் வாதாடுகிறார்.