ஜாலுர் கெமிலாங்கை மாற்ற விரும்புவதாக சொல்லப்படுவதை இருவர் மறுக்கின்றனர்

தேசியக் கொடியை மாற்ற விரும்புவதாகக் குற்றம் சாட்டப்பட்ட பின்னர் பெரும் சர்ச்சையை உருவாக்கிய இரண்டு இளைஞர்கள், அந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.

ஜாஞ்சி டெமாக்கரசி பேரணியின் போது  Sang Saka Malaya கொடியை இருவர் வைத்திருந்ததைக் கண்டதும் அந்தக் குற்றச்சாட்டு எழுந்தது.

அந்தக் கொடி இந்தோனிசியக் கொடியை போன்று இருந்தது. என்றாலும் மலேசியாவின் மஞ்சள் நிற பிறையும் நட்சத்திரமும் அதில் காணப்பட்டன.

நேற்று வெளியிடப்பட்ட வலைப்பதிவு ஒன்றில் செரிகாலா செலத்தான் என்ற அந்த வலைப்பதிவாளர் அந்தக் கொடிக்கு பொறுப்பேற்றுள்ளார்.

“டாத்தாரான் மெர்தேக்காவில் மெர்தேக்கா கொண்டாட்டங்கள் நிகழ்ந்த போது Sang Saka Malaya  கொடியை பறக்க விட்டதற்கு நானும் ஜைரி ஷாபாயுமே பொறுப்பு.”

“ஜாலுர் கெமிலாங்கை (தேசியக் கொடி) Sang Saka Malaya-வுக்கு மாற்றுவது எங்கள் நோக்கமல்ல.  உண்மையில் Sang Saka Malaya கொடி தான் ஜாலுர் கெமிலாங்-காக மாற்றப்பட்டது,” என்றார் அவர்.

தம்மைப் பட்டப்படிப்பு மாணவர் என அடையாளம் காட்டிக் கொண்ட அவர் அதிகாரத்துவ வரலாற்றிலிருந்து அழிக்கப்பட்டு விட்ட சுதந்திரத்துக்கான மலாய் இடச்சாரிகளின் போராட்டத்தை கௌரவிக்கும் பொருட்டு “ஜாலுர் கெமிலாங் உடன்” அந்தக் கொடியையும் பறக்க விட விரும்பியதாக தெரிவித்தார்.

“மலாயாவுக்கு சுதந்திரம் கோரிய அவர்களுடைய போராட்டத்தின் சின்னம் Sang Saka Malaya-வாகும். 1948ம் ஆண்டு மார்ச் மாதம் 17ம் தேதி அபு பாக்கார் பாஹிர் தலைமைத்துவத்தின் கீழ் பேராக் குனோங் செமாங்கோல்,  Hizbul Muslimin-ன் கோட்டையாக இருந்த போது அந்தக் கொடி பெருமிதத்துடன் பறக்க விடப்பட்டது.”

“ஆகவே மெர்தேக்கா இரவில் ஜாலுர் கெமிலாங் தவிர்த்து  அந்தக் கொடியும் பறக்க விடப்படுவதற்குத் தகுதி பெற்றுள்ளது என நானும் ஜைரியும் கருதினோம். Sang Saka Malaya-வில் அவர்களுடைய கடுமையான போராட்டங்கள் நிறைந்துள்ளன,” என்றார் அவர்.