“112 பேரணியில் பிள்ளைகள் முடியாது; நஜிப் நிகழ்வில் முடியுமா ?”

kidsபிரதமருடைய நேற்றைய நிகழ்வில் பிள்ளைகளையும் மாணவர்களையும் அனுமதித்து விட்டு மெர்தேக்கா அரங்கில் நிகழ்ந்த மக்கள் எழுச்சிப் பேரணிக்கு அவர்களைத் தடை செய்த அரசாங்கத்தின் இரண்டு வகையான தரம் கண்டிக்கப்பட்டுள்ளது.

நேற்று செமினியில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பங்கு கொண்ட நிகழ்வில் பிள்ளைகளும் மாணவர்களும் காணப்பட்டதை மிபாஸ் எனப்படும் மலேசிய இந்தியர் முன்னேற்ற சங்கத் தலைமைச் செயலாளர் எஸ் பாரதிதாசன் சுட்டிக் காட்டினார்.

இதனிடையே பக்காத்தான் ராக்யாட் தலைமையில் கிட்டத்தட்ட 100,000 பேர் கலந்து கொண்ட அந்தப் பேரணியில் பிள்ளைகள் காணப்பட்டது தொடர்பில் அதன் ஏற்பாட்டாளர்களை விசாரிக்கத் தொடங்கியுள்ளதாக போலீசார் அறிவித்துள்ளனர்.

அந்த கேஎல் 112 பேரணியில் பங்கு கொள்ள வேண்டாம் என சில பல்கலைக்கழகங்கள் தங்கள் மாணவர்களை ஏற்கனவே எச்சரித்திருந்தன.

“அந்தப் பேரணியில் கலந்து கொள்ள வேண்டாம் என உயர் கல்விக் கூடங்களின் மாணவர்களுக்கு உயர் கல்வி அமைச்சர் ஆலோசனை கூறியது குறித்து மிபாஸ் கேள்வி எழுப்புகின்றது.”

“அதே வேளையில் பேரணியில் பங்கு கொள்ள பிள்ளைகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என போலீஸ் எச்சரித்தது. ஏன் இந்த இரண்டு வகையான தரங்கள் பின்பற்றப்படுகின்றன என்பதே இப்போதைய கேள்வி ஆகும்.

செமினியில் உள்ள டாத்தாரான் தெஸ்கோ சதுக்கத்தில் ஐபிஎப் என்ற இந்தியர் முன்னேற்ற முன்னணி ஏற்பாடு செய்த ‘பிரதமருடன் மக்கள் சந்திப்பு’ நிகழ்வில் பிள்ளைகளும் மாணவர்கள் காணப்பட்ட வேளையில் போலீசாரும் உயர் கல்வி அமைச்சரும் கட்டுப்பாடுகளை அல்லது எச்சரிக்கைகளை விடுக்கவில்லை ?”

“அடிப்படையில் இரண்டு நிகழ்வுகளுமே மக்கள் கூட்டமாகும்,” என்றார் பாரதிதாசன்.