அம்னோ ஆதரவு வலைப்பதிவாளர் பாப்பாகோமோ கைது செய்யப்பட்டார்

pappaஅம்னோ ஆதரவு வலைப்பதிவாளர் பாப்பாகோமோ கைது செய்யப்பட்டுள்ளதாக அரச மலேசியப் போலீஸ்  படை டிவிட்டரில் அனுப்பியுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்காத்தான் ஆதரவு வலைப்பதிவாளர் கிங் ஜேசனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

“போலீஸ் விசாரணைக்கு உதவுவதற்காக பாப்பாகோமோ-வும் கிங் ஜேசனும் கைது செய்யப்பட்டுள்ளனர்,” என  அந்த டிவிட்டர் பதிவு கூறியது.

பாப்பாகோமோ சேர்த்துள்ள அண்மைய வலைப்பதிவில் மலேசிய சீனர்களுக்கு எதிரான இனவாதக்
கருத்துக்கள் அடங்கியுள்ளது என்றும் கிங் ஜேசனுடைய வலைப்பதிவில் பிஎன் வாக்குகளை வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டது.

மலேசிய சீனர்களுக்கு தீங்கிழைக்கப்பட வேண்டும் என பாப்பாகோமோ தமது வலைப்பதிவில் எழுதியுள்ள கருத்துக்கு எதிராக சரவாக் பிகேஆர் உறுப்பினர் ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளதாக இன்று பிரி மலேசியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

இனவாதத் தன்மையைக் கொண்ட அறிக்கைகளை அல்லது கட்டுரைகளை சேர்த்துள்ளதாக கூறப்படும் மேலும்  இரண்டு வலைப்பதிவாளர்களையும் தாங்கள் தேடி வருவதாக புக்கிட் அமானில் உள்ள போலீஸ் வட்டாரங்கள்  தெரிவித்தன.

இதனிடையே ‘Apa lagi Cina mahu’ (சீனர்களுக்கு வேறு என்ன வேண்டும் ?) என்னும் தலைப்பில் முதல்
பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ள உத்துசான் மலேசியாவுக்கு எதிராகவும் புகார் கிடைத்துள்ளதாகவும்
போலீசார் டிவிட்டரில் செய்தி அனுப்பியுள்ளனர்.

உத்துசானுக்கு எதிரான புகாரை போலீசார் 1946ம் ஆண்டுக்கான தேச நிந்தனைச் சட்டத்தின் 4(1) பிரிவின்
கீழ் வகைப்படுத்தியுள்ளனர்.

 

TAGS: