கோலாலம்பூரில் ஒரு மில்லியன் மக்கள் கலந்து கொள்ளும் பேரணி

rallyதேர்தல் மோசடிக்கு எதிராக கோலாலம்பூர் சாலைகளில் ஒரு மில்லியன் மக்களை ஒன்று திரட்டி மாபெரும் பேரணியை இந்த மாதம் பிற்பகுதியில் நடத்தப் போவதாக Solidariti Anak Muda Malaysia (SAMM) Asalkan  Bukan Umno (ABU) ஆகிய அமைப்புக்களின் தலைமையில் பல அரசு சாரா அமைப்புக்கள் உறுதி  அளித்துள்ளன.

அந்தப் பேரணிக்கான தேதி பற்றியும் கூடும் இடங்கள் பற்றியும் ஐந்து நாட்களுக்கு முன்னதாக பொது  மக்களுக்கு அறிவிக்கப்படும் என SAMM தலைவரும் செகுபார்ட் என்றும் அழைக்கப்படும் பத்ருல் ஹிஷாம் ஷாஹ்ரின் கூறினார்.

கோலாலம்பூர், சிலாங்கூர் சீனர் அசெம்பிளி மண்டபத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஒரு கூட்டத்தில் தேர்தல் மோசடி, ஜனநாயகம் பற்றிய விவாதிக்கப்பட்ட போது பேரணியை நடத்துவது பற்றி அவரும் மற்ற அரசு சாரா அமைப்புக்களின் தலைவர்களும் பேசினார்கள்.

அந்தப் பேரணி எதிர்பார்க்கப்படும் கூட்டத்தைக் கவருமானால் கிளானா ஜெயா, பினாங்கு, ஈப்போ
ஆகியவற்றில் நிகழ்ந்த பக்காத்தான் ராக்யாட் பேரணிகளில் கலந்து கொண்ட மக்கள் எண்ணிக்கையைக் காட்டிலும் மிக அதிகமாக இருக்கும்.

Rally1“மே 18ல் நடத்த நாங்கள் திட்டமிட்டோம். மக்களை ஒன்று திரட்டுவதற்குப் போதுமான கால அவகாசம்  இல்லை என எங்கள் ஆதரவாளர்களில் சிலர் அதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர்,” செகுபார்ட்  மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

13வது பொதுத் தேர்தலில் மோசடி நிகழ்ந்தால் சாலைகளுக்கு செல்லப் போவதாக தாங்கள் வழங்கிய ‘உறுதி  மொழியை’ மக்கள் நிறைவேற்ற வேண்டிய தருணம் வந்து விட்டதாக அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு  பேசிய வலைப்பதிவாளரான ஹிஷாமுடின் ராயிஸ் சொன்னார்.

“அந்த (தேர்தல்) நடைமுறை அம்னோவுக்காக உருவாக்கப்பட்டது. அது வெற்றி பெற என்ன வேண்டுமானாலும்  செய்யும். உங்கள் வலிமையால் தேர்தல்கள் மூலம் அம்னோவை அரசாங்கத்திலிருந்து அகற்றி விட முடியும்  என நீங்கள் எண்ணுகின்றீர்கள்.”

Rally2“இது மருட்டல் அல்ல. அது வாக்குறுதி,” என ஹிஷாமுடின் சொன்ன போது அங்கு கூடியிருந்த ஆயிரம்  பேரும் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.”

“மாபெரும் இயக்கத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள். தேர்தல் மோசடி குறித்து ஆதாரங்களைச் சமர்பிக்குமாறு  யாராவது உங்களைக் கேட்டுக் கொண்டால் அவர் முட்டாள் என நான் சொல்வேன். நான் அது குறித்து பல  ஆண்டுகளாக எழுதி வருகிறேன்.”

அவருடைய எண்ணங்களை ABU தலைவர் ஹாரிஸ் இப்ராஹிமும் பகிர்ந்து கொண்டார். மக்கள் இப்போது செயல்பட வேண்டும். அரசாங்கத்தை மாற்றுவதற்கு இன்னொரு வாய்ப்புக்காக மக்கள் இன்னொரு ஐந்து ஆண்டுகளுக்குக் காத்துக் கொண்டிருக்கக் கூடாது என்றும் அவர் சொன்னார்.

TAGS: