பால் அவர்களே, IPCMCஐ அமைப்பது ‘பெயரளவுக்கு’ மட்டுமல்ல-டோனி புவா

TonyIPCMC-ஐ ( போலீஸ் புகார்கள், தவறான நடத்தை மீதான சுயேச்சை ஆணையம் )  அமைப்பது ‘பெயரளவுக்கு’ மட்டுமல்ல. போலீசாரின் தவறான நடத்தை எதுவும்  தண்டிக்கப்படாமல் போவதை தடுப்பதே அதன் நோக்கமாகும்.

அந்த விவகாரம் மீது மஇகா மற்றும் பல அரசு சாரா அமைப்புகளுடன் நடத்திய  விவாதத்தின் தொடர்பில் விடுத்த அறிக்கையில் பிரதமர் துறை அமைச்சர் பால்  லாவ்  IPCMC, EAIC ( அமலாக்கா நிறுவன நேர்மை ஆணையம் )ஆகியவை  ‘பெயர்கள் மட்டுமே எனக் கூறியுள்ளார்.

ஆகவே, EAIC-யை ‘திருத்தி அமைப்பதும்’ ‘வலுப்படுத்துவதும்’ புதிய IPCMC-யை  அமைப்பதைக் காட்டிலும் நல்ல தேர்வாக அமையும் என பால் சொன்னார்.

உண்மையில் அவ்விரு அமைப்புகளுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை  அவர் புரிந்து கொள்ளவில்லை. EAIC பல் இல்லாத புலி. அது IPCMC-யை  அமைக்க வேண்டும் என பொது மக்கள் விடுத்த கோரிக்கையை மட்டுப்படுத்த  எடுக்கப்பட்ட ஒப்பனை நடவடிக்கையாகும். IPCMC-ஐ அமைக்க வேண்டும் என  2005-ஆம் ஆண்டு அரச மலேசிய போலீஸ் படை மீது அமைக்கப்பட்ட அரச  விசாரணை ஆணையம் பரிந்துரை செய்தது. போலீஸ் படையைக் கண்காணிப்பதும்
அதன் தொழில் நிபுணத்துவத்தை உயர்த்துவதும் அதன் நோக்கமாகும்.

EAIC, IPCMC-யின் நோக்கங்களை அடைய விடாமல் தடுக்கும் நோக்கத்துடன்  தோற்றுவிக்கப்பட்டது. அது அமைக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் முடிந்து விட்டது.  அதற்கு ஆண்டுக்கு 7 மில்லியன் ரிங்கிட் மட்டுமே ஒதுக்கீடு கொடுக்கப்படுகின்றது.  இன்று அதில் ஒரே ஒரு புலனாய்வு அதிகாரி மட்டும் வேலை செய்கிறார்.   எழுத்தர்கள், ஓட்டுநர்கள் உட்பட  மொத்தம் 23 பேர் வேலை செய்கின்றனர்.

முன்னாள் தலைமை நீதிபதி அப்துல் ஹமிட் முகமட் கூட EAIC-யின் ஆற்றல்  குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அது அமைக்கப்பட்ட நாள் முதல் ஒரே ஒரு  ஒழுங்கு நடவடிக்கையை மட்டுமே எடுத்துள்ளது. அரசாங்க ஊழியர்களுக்கு இரண்டு  எச்சரிக்கைகளை மட்டுமே வழங்கியுள்ளது.

அந்த ஒழுங்கு நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி பதவியிலிருந்து  இறக்கப்பட வேண்டும் என EAIC பரிந்துரைத்த நடவடிக்கையைப் போலீஸ் படை  அமலாக்கியதா என்பது கூட தமக்குத் தெரியவில்லை என அதன் தலைமை  நிர்வாக அதிகாரி நோர் அபிஸா ஹனும் மொக்தார் கூறியுள்ளார்.

உண்மையில் EAIC அமைப்பை அரசாங்கம் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை.  19 அரசாங்க அமைப்புகளை ‘கண்காணிக்க’ ஒரே ஒரு புலனாய்வு அதிகாரி  மட்டும் இருப்பதிலிருந்து அது தெளிவாகத் தெரிகின்றது. அந்த 19-ல் போலீஸ்  படை, குடிநுழைவுத் துறை, ரேலா ஆகியவையும் அடங்கும்.

புதிய IPCMC-ஐ அமைப்பதை காட்டிலும் EAIC -ஐ திருத்தி அமைத்து கூடுதல்  அதிகாரங்களை வழங்குவது சிறந்த வழி என அமைச்சரவை ஏறத்தாழ முடிவு  செய்துள்ளதாக பால் லாவ் தெரிவித்துள்ளார். ‘சின்னச் சின்ன பிரச்னைகளினால்’  EAIC முறையாக இயங்குவதற்கு இரண்டு ஆண்டுகள் பிடித்ததாக அவர்  சொன்னார்.

EAIC தோல்வி கண்டதற்கு ‘பிரச்னைகள்’ காரணமல்ல. அது தோல்வி காண  வேண்டும் என்ற நோக்கத்துடன் அதனை பிஎன் அரசாங்கம் வடிவமைத்தது.

பால் லாவ் இப்போது அமைச்சரவை பேச்சாளராகி விட்டது தான் உண்மை  நிலை. அனைத்துலக வெளிப்படைக் கழகத்தின் தலைவராக இருந்த நேரத்தில்  அரசுக்கு அவர் அனுப்பிய பரிந்துரைகள் மீதான நம்பிக்கையை அவர் இழந்து  விட்டதாகத் தோன்றுகிறது.

பால் விடுத்த அறிக்கை: “IPCM-Cஐ அமைப்பதற்குப் பதில் சிறப்பு புகார்கள்
ஆணையத்தை அமைப்பது காவல்காரர்களை அரசாங்கம் கட்டுப்படுத்த
முடியாமால் இருப்பதைக் காட்டுகின்றது. அரச மலேசிய போலீஸ் படையின் உயர்  அதிகாரிகள் வெளிப்படையாக எதிர்ப்புத் தெரிவித்ததால் 2005-ஆம் ஆண்டு அரச  ஆணையம் தெரிவித்த IPCMC யோசனை நீக்கப்பட்டு விட்டது”

வெளிப்படை அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் பால் லாவ் தமது முந்திய  நிலையை மாற்றிக் கொண்டு EAIC வடிவிலான சிறப்பு புகார்கள் ஆணையம்  அமலாக்க அமைப்புகளை குறிப்பாக போலீஸ் படையைக் கட்டுப்படுத்த  போதுமானது என எண்ணுவது ஏமாற்றத்தை அளிக்கின்றது.

போலீஸ் தடுப்புக் காவலில் நேற்று 33 வயது ஜப்பானிய பிரஜை ஒருவர்
மரணமடைந்துள்ளார். அவர் தூக்கு மாட்டிக் கொண்டு இறந்ததாக
கூறப்பட்டுள்ளது. தடுப்புக் காவலில் இவ்வாண்டு நிகழ்ந்துள்ள ஒன்பதாவது மரணம்  இதுவாகும். கடந்த 14 நாட்களில் நான்காவது மரணமாகும். போலீஸ் படையின்  தொழில் முறையைக் கட்டுப்படுத்தவும் அந்தப் படையில் உள்ள போக்கிரிகள் மீது  நடவடிக்கை எடுக்கவும் திறமையான முறை அவசியம் என அமைச்சரவை  உணருவதற்கு இன்னும் எத்தனை பேர் மரணமடைய வேண்டும் ?