எம்பி-க்கு 3வாரங்கள்; மந்திரி புசார் விசயத்தில் 3 ஆண்டுகள் ஆகியும் நடவடிக்கை இல்லை

1 anthonyமூன்றே வாரங்களில் அதிகாரிகள் டிஏபி எம்பிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடிவு செய்தார்கள். ஆனால், ரிம10 மில்லியனை சட்டவிரோதமான வழியில் வெளிநாட்டுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் நெகிரி செம்பிலான் மந்திரி புசா முகம்மட் ஹசன்மீது மூன்று ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தாலும் இன்னும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

இவ்வாறு அங்கலாய்த்துக்கொண்ட சிரம்பான் எம்பி அந்தோனி லொக் ஜூன் 22-இல், அமைதிப் பேரணி சட்டத்தை மீறியதற்காக அடுத்த வாரம் நீதிமன்றம் வருமாறு தமக்கு நீதிமன்ற ஆணை வந்துள்ளது என்றார்.

“மூன்றாண்டு ஆகியும் எதுவும் நடக்கவில்லை. நாங்கள் என்று வரும்போது மூன்றே வாரங்களில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது”, என்றார்.

முகம்மட் 2010-இல், நாணய மாற்று வியாபாரி மூலமாக ரிம 10மில்லியனை லண்டனுக்கு அனுப்பியதை அடுத்து அவர்மீது மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் புலன்விசாரணையைத் தொடங்கிற்று.