எனக்கு என் புதல்வி திரும்ப வேண்டும் என்கிறார் இந்திரா காந்தி

indiraதமது மனைவிக்குத் தெரியாமல் தமது மூன்று பிள்ளைகளை இஸ்லாத்துக்கு மதம்  மாற்றிய தந்தை, அந்த மதம் மாற்றத்தை உயர் நீதிமன்றம் செல்லாது என  அறிவித்த போதிலும் இளைய குழந்தையை திரும்ப ஒப்படைக்க மறுப்பதால் அவர்  நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.

முன்பு கே பத்மநாதன் என அழைக்கப்பட்ட முகமட் ரிட்சுவான் அப்துல்லா என்ற அவரது முன்னாள் கணவருக்கு எதிராக ஐந்து வயதான பிரசனா தீக்க்ஷா-வை  அதன் தாயாரான இந்திரா காந்தியிடம் திரும்ப ஒப்படைக்குமாறு  கட்டாயப்படுத்தும் பொருட்டு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தொடங்கப்படும்  என நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

“2010 மார்ச் மாதம் மூன்று பிள்ளைகளைப் பராமரிக்கும் பொறுப்பை உயர்  நீதிமன்றம் இந்திராவுக்கு வழங்கியது. ஆனால் இளைய பிள்ளையை 2009 ஏப்ரல்  மாதம் கொண்டு சென்ற அவரது முன்னாள் கணவர் அந்த நீதிமன்ற ஆணையை  கீழ்ப்படிய மறுத்து வருகிறார்.”

“தந்தை மூன்று பிள்ளைகளையும் இஸ்லாத்துக்கு மதம் மாற்றியது செல்லாது என  வியாழக் கிழமை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் பராமரிப்பு ஆணைக்கு  இணங்க குழந்தையை ஒப்படைக்கத் தவறியதற்காக அவர் (முகமட் ரிட்சுவான்)  மீது நாங்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைப் போடுவோம்,” என இந்திராவின்
வழக்குரைஞரான எம் குலசேகரன் கூறியதாக அந்த நாளேடு செய்தி
வெளியிட்டுள்ளது.

மற்ற இரு பிள்ளைகளும் தாயாரிடம் இருந்து வருகின்றனர்.

இதனிடையே மதம் மாற்றம் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை  எதிர்த்து முகமட் ரிட்சுவான் முறையீடு செய்து கொள்வார் என உத்துசான்  மலேசியா இன்று அறிவித்துள்ளது.

முறையீட்டை சமர்பிக்குமாறு தமக்கு உத்தரவு கிடைத்திருப்பதை ரிட்சுவான்  வழக்குரைஞர் ஹத்திம் மூசா உறுதிப்படுத்தினார் என்றும் அந்த ஏடு தெரிவித்தது.